நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடைகுளிருமா -வாடை வருடுமா

வாழ்வைத்தேடி வயல்வரப்புகளை
விற்றுவிட்டுவந்த நாங்கள்
வறுமையைபோக்க வாலிபத்தை
தொலைத்து வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!


கோடைவெயில் கொடூரமாய்
கொழுந்துவிட்டு எறிய –அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா
[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,
என பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

பாலைவனமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்,,
எதிர்பார்த்திருக்கிறோம்!!!
கோடை என்றாவது குளிருமென்றும்
வாடை என்றாவது வருடுமென்றும்...
 
[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை! அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்] 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இப்படியும் சில





வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..


மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..

சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..

இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..

ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..

விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..

தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மரணிக்கும்போது

                                               [உரையாடல் கவிதைப்போட்டிக்காக]


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...



அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது