பாவங்கள்
பெருகிக்கொண்டே போகிறதே!
படைத்தவனின்
பயம் விட்டுப் போனதாலா?
சொந்த பந்தங்கள்கூட
பாரமாகிப்போகிறதே!
சுயநலங்கள் பெருகுவதாலா?
பொன்னான பூமி அடிக்கடி
பூகம்பத்திற்குள்ளாகிறதே!
பொல்லாத காரியங்கள்
பெருகப் பெருகவா?
அரைகுறை நிர்வாணங்கள்
அல்லும் பகலும்
அரங்கேற்றப்படுகிறதே!
நாகரீக மோகம்
நீண்டுகொண்டே போவதாலா?
மனிதம் காக்கவேண்டிய
மதங்களெல்லாம்
மனிதர்களைக் கொன்றொழிக்கிறதே!
மனங்களுக்கெல்லாம்
மதம் பிடிப்பதாலா?
வைரம்போன்ற மங்கையர்கூட
விலைமகளாகிறாளே!
வெக்கமச்சம் விட்டுப்போவதாலா?
தற்கொலைகள்
தலைதூக்கி நிற்கிறதே!
தன்னம்பிக்கைகள் குறைந்துபோவதாலா?
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறதே!
மனஇச்சைகளுக்கு மட்டில்லா
மதிப்புகொடுப்பதாலா?
வாட்டி வதைக்கும் வட்டி
வகைவகையய்
குட்டிபோட்டு பெருகுகிறதே!
வஞ்சனை குணங்கள்
வற்றா ஆசை கொள்வதாலா?
அழிவுகள்
ஆக்கிரமித்துக்கொண்டே போகிறதே!
அறிவு ”அளவுக்கு”மேல் வளர்வதாலா?
”இன்னும்”
வினாக்கள்?
விளைந்துகொண்டேதான் இருக்கிறது?
விளைந்தவைகளுக்கே
விடை கிடைக்க
வழியற்ற நிலையிலும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.