நிலவுக் குளியலுக்கு
தயாராகிக் கொண்டிருந்தது
இயற்கை!
இருளாடை அணிய
காத்துக் கொண்டிருந்தது பூமி!
கருமை கூடிக்கொண்டே போக
கவ்விய இருளுக்குள்
குடியமர்ந்தது வெளிச்சம்!
யாருமற்ற தருணத்தை உணர்த்தி
அச்சம் மெல்ல
எட்டிப்பார்த்து இளித்ததும்
இறுக்கி கண்களை மூடியபோதும்
இருளின் கருமை கூடியது
இதயநாளத்தின் துடிப்போசை
இடைவிடாது
இடித்து அதிர்ந்தது!
எங்கிருந்தோ
முனங்கல் ஒலி
நெஞ்சத்தின்
மூளையில் ஒலித்தது
இந்த இருள்
அச்சப்படுவதற்கானதல்ல
எச்சரிக்கும் விதமானது!
இறப்பின்
சிறு எடுத்துக்காட்டே
இருள் சூழ்ந்த
இரவின் உறக்கம்
எதிலும் கவனமாயிரு
எப்பொழுதும்
எச்சரிக்கையாயிரு
ஏகன் ஒருவனை
நினைத்துகொண்டேயிரு என்ற
இரண்டாம் மனதின்
இனிய சப்தம் கேட்டதும்!
நேசிக்கும் இறைவனை
இன்னும் அதிகமாக நேசித்தபடி
நீண்ட பெருமூச்சொன்று
நிம்மதியாய் வந்தது
நீண்டு சென்ற இரவின் இருளை
மெல்ல களைந்[த்]த
வெளிச்சமாக..
--------------------------------------------------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.