நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எங்களுக்கும் அருள்வாயாக!

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
அண்ட சராசரத்தின் அதிபதியே!
அருளும் அன்பும் நிறைந்தவனே!

ஆதம் நபியை மண்ணால் படைத்து
அவரிலிருந்து பல சந்ததிகளை
அற்புதமாக மனிதரில் விதைத்து
அகிலத்தை வலம் வரவைத்த
ஆற்றல் மிகுந்த மறையோனே!

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறு காலக் கட்டங்களில்
வெவ்வேறு நபிகளை உலகுக்கனுப்பி
விபரங்கள் விளக்க மக்களுக்கு
வாய்ப்பளித்த வல்லவனே !

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராஹீம் [அலை]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை
அனைவருக்கும் அறியத்தந்து
மனிதர்களின் பொறுமைக்கும்
மனஉறுதியான இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத் தந்து
மகத்துவத்தை ஏற்படுத்திய
மாபெரும் அருளாளளனே!

இப்ராஹீம் நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும் நாள்வரைக்கும்
இம்மக்கள் மறந்திடாதவன்னம்
இத்தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாளை
ஹிதாயத்தோடு தந்தத் தூயவனே!

இறையில்லமிருக்கு மக்காவிற்கு
இறுதிக் கடமையை நிறைவேற்ற
இனிதே சென்றுள்ள மக்களங்கே
இன்னலை நீக்க கண்ணீர் மல்க
இருகரமேந்திய இறையச்சதுடன்
இறைஞ்சி வேண்டி கேட்போர்க்கு
இன்முகம் நோக்கிப் பார்ப்பவனே!
இன்பத்தை வாரிக் கொடுப்பவனே!

எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...


ஹஜ் செய்வதோடு மட்டும் நம் கடமை முடிவதில்லை ஹஜ்ஜின் காரியங்களை முடித்து நாயனின் அருள் கிடைத்து நாடு திரும்பிவந்த பின், அதன்படி நடக்க வேண்டும். நாம் செய்த ஹஜ்ஜின் கடமை இறுதிவரை பலன் தருவதுபோல் நடக்கவேண்டும். பாவங்களைபோக்கிவிட்டு வந்து நல்லதை செய்து நன்மையின் பக்கம் நன்மை முதன்மைப்படுதல் வேண்டும். இதுவே நாம் ஹஜ் செய்ததிற்கான நற்பலனைத்தரும்..

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன்



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது