விழிகண்ட வழியெங்கும்
வியக்கத்தகு வித்தியாசங்கள்
விதவிதமாய் சிதறிக்கிடக்க
வியப்புற்றவாறே
இவ்வுலகப்பாதையில் ஒருபயணம்,,
வண்ண வர்ண ஜாலங்கள்
வண்ணமிகு விழாக்கோலங்கள்
வசதிக்கேற்ற மாற்றங்கள்
விருப்பு வெறுப்பு சூழ்ந்த உள்ளங்கள்
கருவுற்ற வழியில்
வித்தியாசமில்லையென்றாலும்
உருப்பெற்ற வழியில்
வித்தியாசங்கள்!
வழி நெடுகிலும் சிலவகை
விகார கோரங்கள்
வலிகள் வடுக்களாய் மாறியும்
வேதனையில்
வெதும்பித் துவழும் மனங்கள்!
மெல்ல மெல்ல முன்னேறி
முன்னும் பின்னும் பார்க்கையில்
இளமையை களைந்த முதுமைகள்
முதுமையை வெறுத்த இளமைகள்
முன்னுக்குப்பின் எதிராக
முண்டியடித்த முரண்பாடுகள்!
இன்னுமென்ன இருக்கிறதோ!!
என்றெண்ணியபடியே நீண்டது பாதை
எங்கு நோக்கினும் மோகம்
எதைகண்டாலும் ஆசை
எண்ணிடயிலா அதர்மம்
எதற்கெடுத்தாலும் வன்மம்
இவ்வுலப் பயணத்தில்-பாதை
நீளப்போவதில்லையென அறிந்தும்
வழியெங்கும் வினைகளை
விதைத்தபடியே செல்லும்
வினோத மனிதர்கள்
ஆறடியில் அடங்கப்போகும்
உடல்கொண்டபோதே
அளவுக்கடந்த ஆசைகளால்
ஆன்மாக்களை கொன்று
அதன்மேல் நடத்தும் அக்கிரமங்களென
அத்தனையும்
கண்டுகொண்டே வந்தபோது
கண்ணெதிரே பாதையில்லை
அதிர்ந்து அழத்தோன்றியபோது
ஆசுவாசப்படுத்திக்கொண்டது நெஞ்சம்
அயர்ந்த வேளையில்
ஆன்மா கண்டுவந்த பயணமது!
கடந்துவந்த பயணத்தில்
கற்ற பாடங்கள் பலபல-இனி
கடக்கப் போகும் பயணத்தில்
காலச்சுவட்டை கறைப்படுத்தாது-தன்
காலத்தை கடக்கவேண்டிய
பாதையை மாற்ற எண்ணியபடியே -கண்ட
பயணத்தை நினைத்து நடுங்கியது மனது...
இக்கவிதை ”பாதைகளுக்கும் பயணங்களும்” என்ற தலைபிற்காக எழுதி தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது. இக்கவிதை வாசித்தபோது அன்று [துபையில்] தடுமாற்றம் கண்டது.[கையாடினா மைக் ஆடாம என்ன செய்யும் ஹா ஹா]..
அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .