நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தூரிகைப் பெண்ணென்றாலும்!


அடி ஓவியப் பெண்ணே
நீயும்
மன்னித்துவிடு எங்களை
உன் அரை குறை
ஆடை அலங்கோலத்திற்கு
காரணம்
எங்கள் தூரிகைகள் மட்டுமல்ல
இந்த சமூகமும்தான்

அட்டைப்படங்களுக்கும்
அடிமட்ட விளம்பரங்களுக்கும்
உயிர் பெண்மட்டுமல்ல
ஓவிய பெண்ணின்
ஆடை விலக்கல்
அவசியம்வேண்டும்

இல்லையெனில்
எங்கள் விரலோவியமும்
கலை நயமும்
விலக்கப்பட்டுவிடும்
விதி விலக்கில்லாமல்

மன்னித்துவிடு
இந்த
மனசாட்சியற்றவர்களை
உயிர் பெண்ணை காணும்போதே
உள்ளே ஒளிந்திருப்பதை
உற்றுப்பார்த்து பலகும்
கண்களுக்கு

தூரிகைப் பெண்ணென்றாலும்
துகிலுரிப்பதற்கு தயங்குவதில்லை
ஓவியப்பெண்ணை
உருவாக்கும்போதும்
விலக்கி விலக்கி
தானாய் தள்ளி விடுகிறது
ஆடைகளை!

பெண்ணென்றால்
கண்கள் மட்டுமல்ல
விரல்களும்
வில்லங்கம் செய்கிறது
வயிற்றுப்பிழைப்புக்காக
வசதி வாய்ப்புக்காக!

பெண் அங்கங்களை
பந்திக்கு கொடுத்து
பிழைக்கும்
எங்களை போன்றோரையும்
மன்னித்துவிடு

இரக்கமுள்ளவள் பெண்
அதனால்தான் எத்தனை
இளக்காரம் செய்தாலும்
இழிவு செய்தாலும்
எதிர்த்து போரிட தயங்கி

இலகுவாய்
மன்னித்துவிடுவாய் என்றெண்ணித்தான்
உன்னை வைத்து எதையும் செய்கிறோம்
மன்னித்துவிடு
நீதான்
மகா வள்ளலாச்சே!...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது