நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாலையில் கசியும் மெளனம்!



குடும்பம் பசியார
குருதி வேர்வையானது!
இளமை வெறுமையாகி
முதுமையை உடல் சுமந்தது!
பாசங்கள் தூரமாகி
வேசங்கள் நெருக்கமானது!
எல்லையில்லா அன்புகூட
ஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!
இல்லம் சோலையாக
இல்லறம் பாலையானது!
இயற்கை இன்பங்கள் செயற்யாக
செயற்கை இன்பங்கள் துன்பமானது!
உறவுகள் ஒட்டிவர
உழைப்பும் கைகொடுத்தது!
உள்ளபடி சொன்னாக்கா
உடலோடு உள்ளமும் புண்ணாகிறது!
விடுமுறை ஒன்றே விடுதலை தருகிறது!
விடுதலை பெரும்வேளை
வியாதிகளும் தொடர்கிறது!
வியாதிகளோடு வயோதிகமும் சேர்கிறது!
வதையும் கூடுகிறது வாழ்க்கையும் கழிகிறது!
இதுதான்  வெளிநாட்டு வாழ்க்கை 
இதற்குதான் எத்தனை விதமான சேட்டை!..

நன்றி தமிழ்குறிஞ்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வீட்டுக்கு தூரம்

கோவை: கின்னஸ் சாதனைக்காக, 1001 கவிஞர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் கவியரங்கம். கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்,கோவை அரிமா சங்கம் ஆகியவை தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்தியதல்லவா அதற்காக இரு கவிதைகள் அனுப்பிருந்தேன், [என்கவிதை ”தமிழ்குடில்” குரூப்பால வாசிக்கபட்டதாம்] அதில் ஒன்றுதான் இக்கவிதை.

 வீட்டுக்கு தூரம்


கழிவறைக்கும் கையில் இரும்பு
கால்மாட்டில் துடைப்பம்
தலைமாட்டில் உலக்கை
தனி பாத்திரம், தனித்த படுக்கை
தனிமைச்சிறை.

இன்னும்
எதைத் செய்தாலும் குற்றம்- மாதத்தில்
ஏழு [மூன்று] நாள் மட்டும்!

தண்ணீர் ஊற்றாதே!
பூக்கள் கருகிவிடும்.
ஊறுகாயை தொடாதே!
ஊசிப்போய்விடும்.
தீபம் ஏற்றாத்தே!
தெய்வ குற்றம் ஆகிவிடும்.
தனியே செல்லாதே
பேய்கள் பிடித்துவிடும்!

இதென்ன கொடுமை
இயற்கை உபாதைக்கு
இவளுக்கு எதுக்கு தண்டனை ?
மாத விலக்கால்
மடி தரும் வலி -அதோடிந்த
மனித விலக்கால்
மனம்  நிறைந்த வலி
 
தீண்டாமை தொடங்குமிடம் எதுவோ?
தீட்டென்னெச் சொல்லி
தள்ளி வைக்கப்படும்
தன் வீட்டில்தானோ!..
----------------------------------------
 400 த்தாண்டி 402 வது எனது பதிவில் சந்தோஷப்படவேண்டிய இருவிசயங்கள்.
 ஒன்று சகோ செய்தலி கொடுத்த அன்பு விருதும். மற்றொன்று. கணேஷாண்ணா. மற்றும் செய்தலி  தொடர்ந்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான். இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நம்பவே முடியவில்லை 401



அன்பான அன்புகளுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள். ஏன் திடீரென்று நன்றியெல்லாம் அப்படின்னு பார்க்கிறீங்களா? எல்லாம் காரணமாத்தான். இந்த நீரோடையில் நான் எழுதத்தொடங்கிய பொழுது தந்த ஊக்கங்களும் கருத்துகளும் அன்பு பரிமாற்றங்களும் நட்புவட்டங்களும் சொல்லில் அடங்காதவைகள். அவைகளின் தொடர்ச்சியால் இன்றோடு எனது 400 வது பதிவை முடித்து 401 வது தொடங்குகிறேன். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே! அதிகம் கற்றறியாத எனக்கு அவன் அறிவைத் தந்தான் அதனில் நின்றும் எழுதறிவையும் எழுத்தாக்கத்திற்கான எண்ணங்களில் அறிவையும் தந்தான். அதன்மூலமே பற்றிப்பிடித்துக்கொண்டேன் எழுத்தாற்றலை ஆகவே எனது எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரனான இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரியவைகள்..

நம்பவே முடியவில்லை நானா எழுதுகிறேன் என்று..

மேலும்  நீரோடையில் மட்டும் இது 401 வது பதிவு. இதற்க்கு ஒத்துழைப்பு தந்துகொண்டிருக்கும் உலக்கிலுள்ள அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் எந்நாளும் எனது நன்றியென்னும் அன்புகலந்த நட்பு பாசம் அனைத்தும் இம்மியளவும் குறையாதிருக்கும் என்றும் அன்புடன் மலிக்கா ஆனந்தகண்ணீரோடு தங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைகூறிக்கொள்கிறேன்..

டிஸ்கி//
பொதுநலவாதி சொன்னது…
விழிப்புணர்வு அதுவும் பெண்கள் சமூக விழிப்புணர்வுக்கு விழிப்புணவை ஏற்ப்படுத்த பேசுவதற்க்கும். நீங்கள் தொகுப்பதற்க்கும் பணம் வாங்கிகொண்டுதானே செயலாற்றியிருப்பீர்கள். பணம் இருப்பின் விழிப்புணர்வுகள் தானாக வரும் பணம் படைத்தவன் எந்நேரமும் விழிப்புணவோடும் இருப்பான் விழி மூடாமல்கூட இருப்பான்.. பணமிருந்தால் விழிப்புணர்வு மாநாடென்ன உலக மாநாடே போடலாம்.. தொகுத்து வழங்குனதற்கு எவ்ளோ கொடுத்தாங்க பணம் அதை வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு இருங்க இல்லாவிட்டால் அதையும் ஆட்டய போடும் உலகமிது..// அன்பு சகோதரே!  மனிதர்களில் செயல்கள் அனைத்தையும் அறிந்தவன் இறைவன்  . பெருமைக்காவோ அல்லது புகழ்ச்சிக்காவோ சொல்லவில்லை. நான் தொகுத்தளித்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்கியதில்லை. இதற்க்கு முன் March 03, 2012 இலக்கிய மாநாடு நடந்தது அதற்க்கும் நான்தான் தொகுத்து வழங்கினேன். இதோ 12-5-2012 அன்று நடந்த சமூக விழிப்புணர்வு மாநாட்டையும் நான்தான் தொகுதளித்தேன் ஆகவே! தாங்களைபோல் என்னைப்பற்றி தவறாக எண்ணியுள்ள ஒருசிலருக்கு[ அட சிலர் இங்கிட்டும் இதபோல முணுமுணுக்குறாங்கப்பு] இதன்மூலம் சொல்லிக்கொள்கிறேன் பணம் இன்று வரும் நாளைபோகும். நான் முதலில் செய்தது என் தமிழுக்காக! தற்போது செய்தது என் மார்க்கத்திற்காக!. பணம் வாங்கிக்கொண்டு நான் செய்திருந்தாலும் அது தவறில்லையே! இருந்தபோதும் நான் செய்யாத ஒன்றை செய்ததாக சொல்வது. கதை கட்டுவதெல்லாம் நல்லதில்லீங்கோ! அதுசரி இப்படி எத்தனைபேர் கிளம்பிருக்கீங்க.. ஹா ஹா.. அதவிடுங்க முதலில் நான் எப்படி தொகுத்து வழங்கினேன் மாநாட்டையின்னு இங்கு சென்று பார்த்துவந்துவிட்டு கருத்துகளை பகிருங்கள் ஓகேவா! அனைவரும் சென்று பார்த்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள். மீண்டும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என் எழுத்துகள்
எங்கும் ஒலிக்கட்டும்
ஏகயிறையோனின் அருள்கொண்டு
நீரோடை என்றும் 
தெளிந்த நீராய் ஓடட்டும்
எண்ணிலடங்கா உங்களின் 
ஏற்றமிகு கருத்துகளைக்கொண்டு..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

குற்றவாளியா? நிரபராதியா?




ஆணில் பலர் ஆதிக்கவாதி!
அவன் பேச்சை மட்டுமே!
கேட்டாகவேண்டுமென
கட்டளையிடும் சர்வதிகாரி!

தனக்காக எதையும்
வளைத்து ஒடிக்கும் தன்னலவாதி!
தேவைப்பட்டால் தயங்காது
பெண்மீது குற்றஞ்சுமத்தி
தப்பிக்கும் சுயநலவாதி!

பெண்ணை தன்கட்டுப்பாட்டுக்குள்
பொத்தி வைப்பதாய் நினைத்துக்கொண்டு
புதைக்காமல் புதைத்து வதைக்கும்
பொல்லாத மனங்கொண்ட
சந்தர்ப்பவாதி!

தன் நடத்தை பிசகலாம்
தான் வழி தவறலாம்
அதையெல்லாம் பொருத்துக்கொண்டு
தன்னோடு வாழவேண்டுமென நினைக்கும்
அதிபுத்திசாலி!

தீயைபோல் தீண்டி சீண்டும்
தீய சொற்களை கொண்டு
கொண்டவளை கொடுமைப்படுத்தும்
தீயகுணங்களைக்கொண்ட
தீவிரவாதி!

தனக்குமட்டுமே அனைத்தும் அறியும்
தன்னை நம்பிவந்தவள்
மடமையின் கூடாரமென
தன்னையே உயர்த்திக்கொள்ளும்
தற்பெருமைவாதி!

தன்னைவிட பெண்
தாழ்ந்தவளென்றும்- என்றும்
தனக்கே அடிமையென்றும்
தரைக்குறைவாய் நடத்தும்
தரிகெட்டவாதி!

எந்நிலையிலும் எச்சூழலிலும்
தன்னை விட்டுக்கொடுக்காது
தன் மார்தட்டியே வாழும்
நீதியறியா நீதிபதி
குற்றவாளியான நிரபராதி!

அகிலமெங்கும்
பரவி விரவிக் கிடக்கிறதோ
இதுபோன்ற பலவியாதிகள்

இத்தனை 
வியாதிகளையும் தாங்கிய
பயங்கரவாதியா? ஆண்கள்.. 

டிஸ்கி// அண்ணாத்தேக்களா! சகோக்களா! இதெல்லாம் நிஜமா? உங்களுக்கு இப்படியெல்லாம் இருக்கா? பாவம் மக்கா பெண்மக்க நேற்றுமட்டும் மூன்று பெண்களின் நிலைகள் இதுபோல் கேட்டறிந்து மனம் சங்கடத்திலும் சங்கடம். இதெல்லாம் எங்கேபோய் கேட்டிக” எல்லாம் பாஸ்போட் ஆபீஸ் வாசலில் வெட்டியா 6 -7  மணிநேரம் இருக்கும்படியாச்சி அதில் பல பல சுவாரஸ்சியங்கள் சொல்லிடங்காச் சோகங்கள். என நேரம்போனதே தெரியலை.. ஹூம் இப்படியெல்லாம்கூட இருப்பாங்களா?  எல்லாம் உங்க வர்கம் பண்ணுறதுதானே! அதேன் எழுதிட்டேன்.சரி சரி அதுக்காக என்னை வெஞ்சிடாதிங்க!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

  3. நாள் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று சற்று தேர்ச்சிபெற்றதும் இதோ உங்கள் முன் வந்து மாநாட்டிற்க்கு அழைப்பு விடுக்கிறேன்..

முத்துப்பேட்டையில் [அட நம்ம ஊர்லதானுங்க] வரும் 12-5-2012 சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள். சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . அதுசரி அதில் உனக்கென்ன வேலை என்கிறீகளா? அதுவா பெரிய பெரிய அறிவாளிங்க பேசப்போகிற மாநாட்டை இந்த பச்சப்புள்ளதானுங்க தொகுத்து வழங்கப்போகிறது. உள்ளுக்குள்  உதறல் இருந்தாலும் இறைவன்மேல் பாரத்தைபோட்டுவிட்டு துணிந்து சரியென்று சொல்லிட்டேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான் என்ற நம்பிக்கையோடு..

 உங்கள் அனைவரின் அன்போடு நீரோடையில் வலம் வருகின்ற நான். தற்போது இப்படியும் வலம் வரத்தொடங்கியிருக்கிறேன். இதற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளும் வேண்டும்.  அதனோடு தாங்கள் அனைவரையும் மிக மிக அன்போடு இந்த மாநாட்டுக்கு அழைக்கிறேன்.

அன்று நடைபெறும் இம்மாநாட்டினை  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில்  இணையதளத்திலும் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்..

அனைவரின் வருகையையும்  எதிர்பார்த்திருக்கும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது