நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பள்ளிக்கூடம் போறேனுங்க!


 ரொம்ப நாளாச்சி உங்கக்கூட மனம்விட்டு பேசி. இடைப்பட இந்த ஒரு மாதகாலத்தில் என்னுடைய எந்த பதிவுக்கும் நான் உங்களுக்கு பதிலலிக்கவேயில்லை அது மன உறுத்தலாகவே இருந்தது அதற்க்காக அன்பு உள்ளங்கள் முதலில் மன்னிக்கவும்.


இந்த இடைவெளியெல்லாம் நான் பள்ளிக்கூடம் போவதால்தான் படிப்புக்கு வயதேது என்பதின்பேரில் தற்போது நான் பள்ளிக்கூடம் போகிறேன் . [என்னது பள்ளிக்கு படிக்கப்போகிறாயா என்ன கொடுமடி மலிக்கா இது அப்படிங்கிரீங்களா] அதே தான் படிக்கும் வயதில் படிக்கத் தவறியதை மீட்டெடுக்க ஒரு சந்தர்ப்பமாய். அமைந்த சந்தர்ப்பத்தை நல்லவிதத்தில் பயன்படுத்திக்கொண்டேன்.
இறைவன் சிலருக்கு நினைத்ததை உடனே கொடுப்பான் சிலருக்கு கொஞ்சம் லேட்டாய் கொடுப்பான் அதுபோல்தான் இதுவும். [இது ரொம்பவுல்ல லேட்டாவுலத் தெரியுது அப்படின்னு முணுமுணுப்பது கேட்கிறது ஹா ஹா] சரி விசயத்து வான்னு சொல்வதும் கேட்கிறது .


கடந்தமாதம்: ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் ரஹ்மத் மெட்ரிக்குலேஷசன் பள்ளியின் நிறுவனருமான முத்துப்பேட்டை திரு முஸ்தபா அவர்கள், நான் எழுதிய உணர்வுகளின் ஓசை கவிதை நூல். மற்றும் இணையத்தில் வலம்வருவதை அறிந்து என்னை அவர்களின் ரஹ்மத் பள்ளிக்கு அழைத்திருந்தார்கள். [ ஒண்ணுகூடிட்டாங்கன்னுப்பா ஒண்ணுகூடிட்டாங்க முத்துப்பேட்டை காராங்களெல்லாம் ஒண்ணுகூடிட்டாங்கன்னுப்பான்னு சொல்ல இப்ப ஓடிவருங்களே நம்ம சகோக்கள்] நானும் மச்சானும் சென்றிருந்தோம். ஒரே ஊருன்னாலும் அப்போதுதான் நேரில் இருவருமே பார்க்கிறோம். வசதி படைத்தவர் என்ற எண்ணமில்லாமல் மிக தன்மையாகவும் கண்ணியமாகவும் பேசினார்கள்.எழுத்துப்பணிக்கள் மற்றும் இலக்கியத்தை பற்றி பேசினார்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலமிருக்கும்மா, நம்ம ஊரு பெண்ணுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க என்னாலான உதவிகள் நிச்சயம் செய்வேன் என்றார்கள்.


எனக்குள் இருக்கும் எழுத்தார்வம்கண்டு . உன்னைப்போல் இங்கும் நிறைய மாணவிகள் கவிதை எழுதுகிறார்கள் அவர்களை இனம் கண்டுபிடித்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும் வெளிக்கொண்டுவரமுடியுமா? என்றார்கள் நிச்சயம் முடியுமென்றேன். அதேபோல் வரும் மார்ச் 3ந் தேதி இப்பள்ளியில் நடக்கவிருக்கும் இலக்கியமன்றத்திற்கு உனக்கான வாய்ப்பைத் தருகிறேன், அதற்காக பள்ளிக்குழந்தைகளை தயார் செய்யமுடியுமான்னு கேட்டார்கள். மறுப்பின்றி வேகமாக தலையசைத்தேன். [எந்த ஒரு வாய்ப்பையும் வரும்போது தட்டிக்கழித்துவிட்டால் திரும்பவருமுன்னு சொல்ல முடியாதல்லவா?] நிச்சயமாக என்னால் முடிந்தளவு செய்கிறேன் என்றேன். நாளையிலிருந்து பள்ளிக்குவாருங்கள் எப்படி செய்யனுமோ அதன்படி திட்டமிட்டு செயல்படுங்கள். நிகழ்ச்சி அற்புதமாக இருக்கனுமென்றார்கள். உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சரி என தலையாட்டினேன்.உடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை அழைத்து விசயத்தை சொன்னார்கள். நாளையிலிருந்து மலிக்கா பள்ளிக்கு வருவார்கள் என்று அவர்களிடம் தகவலைச்சொல்லிவிட்டு. பொருப்பை என்னிடம் தந்துவிட்டு அன்றே அவர்கள் சிங்கை சென்றுவிட்டார்கள்.

அடுத்த நாள் காலை பள்ளிக்கு சென்றேன்.ஆசிரியையாக. [கடந்தகாலத்தில் மாணவியாக முதல் நாள் பள்ளிக்கு சென்ற நியாபகம் நினைவில் நிழலாடியது. ] முதலில் ஆசிரியர்கள் அறிமுகம். அப்புறம் 5 வகுப்பிற்கு விஜயம். எல்லாக் குழந்தைகளும் குட்மார்னிங் மிஸ் என்றதும் அப்பப்பா எனக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்துப்பறக்க இதெல்லாம் நிஜமாயென என்ற பிரம்மையிலேயே நின்றேன், பின் சுதாரித்து குழந்தைகளிடம் பேசினேன். நான் எதற்க்கு வந்துள்ளேன் என்று கொஞ்சம் பேசிவிட்டு கவிதை எழுதத்தெரியுமா என்றேன். சிலர் ”ம்” என்றார்கள் சிலர் அப்படின்னா என்றார்கள். உடனே கரும்பலகையில் இருவரி எழுதிக்காட்டினேன். இதேபோல் 2. வரி 4. வரி 6. வரி என எழுதலாம். நான் தரும் தலைப்பில் என்றேன் ஆர்வத்தோடு சரி என்றார்கள். என் தமிழ் என்ற தலைப்புக்கொடுத்து மாலைக்குள் எழுதி தாருங்கள் என்றேன், அனைவரும் தலையாட்டினார்கள். அடுத்தடுத்து மற்ற இரு வகுப்பறைக்கு போனேன். இதேபோல் வரவேற்ப்பு. நீங்களே தலைப்புவைத்து எழுதலாம் என்றும் சொல்லிவந்தேன்.

மாலைக்குள் அப்பப்பா என்னாலே நம்பமுடியவில்லை கவிதை மழை பொழிந்துவிட்டது காகிதங்கள் வழியாக.[3 வகுப்புகுழந்தை ஒன்று அம்மா என்ற தலைப்பில். அம்மா என்னை அடிக்கிறது எப்போதும் திட்டுகிறது அப்பா சம்பாரித்து தருகிறார் என்று சற்று எழுதுப்பிழைகளோடு எழுதிருந்தது.
பலவித தலைப்புகளில் சிலது படிக்கும்போது ஒரே சிரிப்பு, சிலது ஆச்சர்யம், சிலது புரிந்தும் புரியாமலுமென்று எனக்கு ரொம்ப சந்தோஷம்.அதேபோல் அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யம். இவர்களுக்கு இப்படியிருந்திருக்கு மிஸ். அப்பப்ப எழுதுவார்கள் ஆனால் இப்படியில்லபா என்றதும், எனக்குள் மகிழ்ச்சி. இனி இவர்களுக்கு இலகுவாக அருமையாக கவிஎழுத கற்றுக்கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்தது. என்னை நம்பி கொடுக்கப்பட்ட பொருப்பிற்க்கு சிறுவெற்றி கண்டாச்சி,

இனி அடுத்து இலக்கியமன்ற நிகழ்விற்கான தயாரிப்புக்கு இறங்கவேண்டும் என்று தமிழாசிரியை திருமதி செல்விமேரியை எனக்கு துணையாக வைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். 6 மாணவிகள் பட்டிமன்றத்திற்க்கு.[பட்டிமன்றத் தலைப்பு கணிணி சமூகத்தை சீர்படுதுகிறதா?சீரழிக்கிறதா?]

 1 மாணவி பெண்ணிய கவித்தை பெண்ணே எழு!

4 மாணவிகள் நாட்டுப்புறபாடலிற்க்கு. [சோறு போடும் சேறு நாட்டுப்புறப்பாடல் ]

5 மாணவிகள் கவிதை அந்தாதியிற்க்கு [கல்வியின் அவசியம். கவிதை அந்தாதி.] என 16 மாணவிகள் தேர்வு செய்துகொண்டு கலத்தில் இறங்கியாச்சி.

எல்லாம் தயார் செய்து நாளை இலக்கியவிழா என்றிருக்க. முதல்நாளே சிறப்பு விருந்தினரின் [யார் அந்த சிறப்பு விருந்தினர் அது சஸ்பென்ஸ்]கட்டவுட் பள்ளியின் வாசலில் பிரமாண்டமாய் நிற்க. வந்துவிட்டார்கள் பள்ளியின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள் என்னை அழைத்து என்னமா எப்படியிருக்கு என்ன செய்யபோகிறாய் என நிகழ்வுகள் பற்றி கேட்டுவிட்டு கடைசியாக ஒரு குண்டை தூக்கிபோட்டார்கள். என்னாது அதுவா நிகழ்ச்சியை நீதான் தொகுப்பாளினி என்றார்களே பார்க்கனும் அச்சோ நானா சரியாக வருமா என்றேன். எல்லாம் வரும் நீயேதான் செய்கிறாய் என்றார்கள்.

எப்படி தொகுப்பது என்ன தொகுப்பது என எண்ணியபடியே பயம்பாதி அச்சம் பாதி இரவெல்லாம் தூக்கமில்லை. ஒருவழியாக விடிந்துவிட்டது மார்ச்-3 ந்தேதி மாலை 6 மணி.தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் [உ வே சா] அவர்களின் 8. ஆம் ஆண்டு இலக்கியமன்ற நிறைவு விழா சிறப்பு விருந்தினராக காந்திய இயக்கத்தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள்.வருகைதர நடுக்கமிருந்தாலும் தொடங்கிவிட்டேன் எனது தொகுப்பாளினியின் பணியை.இடையிடையே நம்மால் முடிந்த கவிதை வர்ணணைகளோடு தொடர்ந்தது தொகுப்புப்பணி.


எப்படி இதோ இப்படி.

[இது செய்திதாள்களுக்காக தரப்பட்ட செய்தி தொகுப்பு]

இம்மாதம் 3 -3 - 2012 அன்று முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் நடைபெற்ற தமிழ்த் தாத்தா என்று தமிழ்க் குழந்தைகளால் அன்புடன் போற்றப் பெறும் ஸ்ரீ மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் [உ வே சா] அவர்களின் 8. ஆம் ஆண்டு இலக்கியமன்ற நிறைவு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக காந்திய இயக்கத்தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களும்.மற்றும் இலக்கிய மன்றர் திரு ராஜ்மோகன் அவர்களும் மற்றும் பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

திருமதி மலிக்கா ஃபாரூக் தொகுத்து வழங்க, இறைவணக்கத்தோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் இனிதே விழா துவங்க, போட்டியில் வென்ற மாணவிகளுக்கு திரு தமிழருவி மணியன் அவர்கள் கைகளால் பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்து பெண்ணியகவிதை, கவிதை அந்தாதி மற்றும் நாட்டுப்புறப்பாடலென கவிஞர் மலிக்கா ஃபாரூக் அவர்கள் எழுதிய, அனைத்தையும் மிகச்சிறப்பாக வாசித்தும், கிராமியமணத்தோடு பாடியும் மாணவிகள் அசத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து திரு ராஜ்மோகன் சிறப்புரை ஆற்ற, திரு தமிழருவிமணியன் அவர்களை மேடையேற்றி ரஹ்மத் அறக்கட்டள்ளை மற்றும் ரஹ்மத் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிறுவனருமான திரு முஸ்தபா அவர்கள் பொன்னாடை போர்த்தியும். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி சகுந்தலா அவர்கள் கேடயம் வழங்கியும் கெளரவித்தார்கள். அதன்பின்பு ”கணிணி சமுதாயத்தை சீர்படுத்துகிறதா! சீரழிக்கிறதா!” என்ற தலைப்பிற்கு பட்டிமன்றம் தொடங்க அதற்கு நடுவராக திரு தமிழருவி மணியன் அவர்கள் இருக்க, சூடாகவும் அதேசமயம் சுவையாகவும் தொடங்கிய பட்டிமன்றம் வெகு சிறப்பாக மாணவிகள் பேசி அனைவரையும் அசரவைத்துவிட்டார்கள்.

இறுதியாக திரு தமிழருவிமணியன் அவர்கள். குற்றால அருவியாய் தன் தமிழின உணர்வை குளு குளுவென்று உரை நிகழ்த்திய அதேசமயம் மாணவிகளை ஊக்குவிக்கும் வன்னமாக தமிழ்சார்ந்த கேள்விகளும் கதைகளும் சொல்லி 1.மணிநேரம் போனதே தெரியாமல் மெய்மறக்கச்செய்துவிட்டார்கள். திரு மணியன் அவர்களின் பேச்சில் ஒரு சாந்தம் அதே சமயம் ஒரு தமிழிய கம்பீரம் இருந்தது. அனைவருக்கும் அவர்களின் பேச்சை இன்னுமின்னும் கேட்க்கும் ஆவலைத்தூண்டியது. தமிழருவியென்ற பட்டம் அவர்களுக்கு மிக மிக பொருத்தமானது.

மேலும் தானே புயலுக்கான நிதி உதவி திரட்டுவதற்க்காக தான் துண்டேந்தி மாணவர்கள் முன்பு வருவதாக திரு தமிழருவி மணியன் அவர்கள் மேடையில் அறிவித்தபோது அதற்காக ரஹ்மத் பள்ளியின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்கள் 1 லட்சம் ரூபாய் உடனே கொடுப்பதாக அறிவித்தார்கள். துண்டேந்தாத அளவிற்க்கு நிதியை தந்து என்னை கெளரவப்படுத்திவிட்டார்களென்று திரு முஸ்தபா அவர்களைப்பற்றி திரு மணியன் அவர்கள் நெகிழ்ந்தும், அதனோடு தானே புயலுக்கு பள்ளிமாணவிகளும் நிதி திரட்டி தருவதாக அறிவிப்பு செய்ததும் அனைத்து நிகழ்ச்சிக்கும் மகுடம் வைத்ததுபோல் அமைந்தது.
இதனைத்தொடர்ந்து நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.
[இதோ இரு ஜீவன்கள் மூலையில் நிற்பது தெரிகிறதா. கருப்பும். ஊதாவுமாக. அது நானும் செல்விமேரியும்தான். ஹி ஹி]


இலக்கிய விழாவை மிக சிறப்பாக நடத்திக்கொடுத்தமைக்காக மலிக்காவுக்கு பாராட்டுகள் கிடைத்தது. திரு தமிழருவி மணியன் அவர்களிடம் உரையாடிவிட்டு எனது கவிதை நூலை கொடுத்தேன் படித்துவிட்டு நிச்சயம் இதற்கான கருத்துகள் தருவேன் என்றார்கள்.

அதிகம் படிக்காத நான் இப்படியான ஒரு நிகழ்வை செய்துமுடித்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இறைவனால் தரப்பட்ட இந்த எழுத்துக்களால் மனம் நிறைந்த மகிழ்ச்சியே! இன்னுமின்னும் நிறைய தமிழுக்காக செய்யனும். எல்லாப்புகழும் இறைவனுக்கே.

இந்த வாய்ப்பை தந்த பள்ளீயின் நிறுவனர் திரு முஸ்தபா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இலக்கிய நிகழ்ச்சிக்காக ஒத்துழைப்பு செய்த தலைமை ஆசிரியர் திருமதி சகுந்தலாஅவர்களுக்கும். மற்றும் என்னோடு  அனைத்திற்க்கும் துணையாக இருந்த திருமதி செல்விமேரி.திரு தியாகராஜன் அவர்களுக்கும். மற்றும் அனைத்து ஆசிரியைகள். மாணவிகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்..
இந்த எழுத்துகள் அடுத்த ஒரு காரியத்தினையும் செய்ய வைத்தது இன்சா அல்லாஹ் அதனைப்பற்றிய அடுத்த பதிவில் எழுதுகிறேன்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது