நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காணாமல் போனதே கார்மேகம்!




கார்மேகங்களென
கருத்த நீண்ட
கருங் கூந்தலெல்லாம்
கணுக்கால்களை தொட்டது அன்று!

கழுத்துக் கீழ்  காற்றில் ஆடியபடி
கத்தரிக்கோலுக்கு இரையாகி
கருங்கூந்தலே
காணாமல் போனது  இன்று!

பளபளக்கும் பட்டும்
தளைத் தளையப் பின்னலும்தான்
தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப் கட்டும் பேண்ட் சர்ட்டும்
வெளிநாட்டவரின் மறுஉருவம்

மேலைநாட்டின் மோகம்
மேம்பட்டுப் போகப் போக
மேகக் கூந்தலும்
மேலோட்டமாய் ஆனது

ஆடைகள் குறைவதுபோல
அழகிய கூந்தலும்
அளவுகோலில்லாமல்
அடியோடும் குறைகிறது!

நாகரீகம்  மேலோங்கி
கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும்
வெவ்வேறு நிறங்களாகியது!

அந்திவானம்
சிவந்தால் அழகு
அடிபெண்ணே!உன் கூந்தல்
கறுத்தால்தான் அழகே!

அழகு மேனிக்கு
அங்க அலங்காரமும்
சிகை அலங்காரமும்
செய்வதில் தவறில்லையே!

அதற்காக!
சிகையையே அலங்கோலம் செய்து
அங்கத்தின் தரத்தை
குறைக்கலாமோ பெண்ணே!....


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

ஓ இதுதான் சமூகமா?



தன் தலைவனின்
சுவரொட்டிகள் ஒட்டபட
சூடுபரக்க காய்ச்சப்படுகிறது பசை
கிழிந்துகிடக்கும்
தன் வாழ்க்கை ஓட்டையை
அடைக்க வழியின்றி..

கூடிஉதவும் கூட்டுக் குடித்தனத்தில்
உடன்படாத உள்ளங்கள்
கூக்குரலெழுப்பினாலும் ஓடிவராத
அடுக்குமாடி குடியிருப்பிற்கு ஆசைப்படுகிறது
விட்டுக்கொடுக்கும் மனமின்றி..

நியாயமான முறையில்
நேர்வழியில் செல்லக்கூட
குறுக்குவழியை கற்றுகொடுக்கும்
நேர்மையற்றோரின் நெஞ்சங்களால்
நிர்ணயிக்கப்படுகிறது
லஞ்சமென்ற மொய்கள்
அன்பளிப்பென்ற பெயரால்..

வாடும் வறுமையை போக்கிட
வாங்கிடும் பணம்
பெருக்கல் இல்லாமலே
பெருகிப்போய்
வாட்டி வதைக்கும் ஏழை மனங்களை
வட்டியென்ற கொடுமையால்..

அக்கரைகொண்ட அறிவிப்புகள்
குடி குடியை கெடுக்குமென்று
அது அடுத்தவனின்
குடியைதானே கெடுக்கும்
அறிவிக்கும் குடும்பத்தையல்ல
என்பதைபோல்..

பூவுலகில் வாழ
புண்ணிய வழிகள் பலயிருந்தும்
பூவுடலை புலக்கடையில் விற்று
புண்ணாகி பிறரையும் புண்ணாக்கி
பால்பட்டுப் பட்டமரமாகிய
விபச்சார வர்கம்
வெந்து சாகிறது வேதனை தாங்காமல்..

வீட்டுக் கதவு திறந்தே கிடந்தும்
சுகந்தமான காற்றை சுவாசிக்க
வெளிக்காற்று உள்ளே வருவதில்லை
வாசலில் வளர்ந்த மரங்களையெல்லாம்
குப்பைகளாக்குகிறதென சொல்லி
கொன்றுபோடுவதால்..

தன்வீட்டில் நடக்கும் அசிங்கங்களை
மறைக்க நினைக்கும் மனங்கள்
அடுத்தவீட்டு விவகாரத்தை
கண் வைத்து கைகால் வைத்து
கட்டுக்கதையாகி பற்றி எரியவைக்கும்
காட்டுத் தீயைப்போல்..

இப்படியான  சமூக நிகழ்வுகள்
இனிமேலாவது உருவாகாமலிருக்க
இனிய எண்ணம் கொள் நல்மனமே
இனி என்றும் மகிழ்வாகும்
இந்த சமூகமே!...

டிஸ்கி// அன்று எழுதியகவிதை முன்பு போட்டேனான்னு நியாபமில்லை. இருந்தாலும் மீண்டும். யோசிக்க நேரமில்லீங்கோ அதேன் இப்படியெல்லாம் ஹா ஹா ஹா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வா! வாழ்க்கையை வலையாக்கலாம்!


வாழ்க்கைக் கடலில்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளெல்லாம்
எதிர்த்திடும் சில மன அலைகள்
எதிர்த்திட முடியாமல்
தவித்திடும் பல நிலைகள்

எண்ண அலைகளில் சிக்கி
எண்ணிலடங்கா நினைவுகள்
நீராடுகின்றன -சில சமயம்
நீச்சல் தெரிந்தும்
தெரியாமலும் போராடுகின்றன!

நீராடுவது நீராடட்டும்!
போராடுவது போராடட்டும்!

அலைகளோடு அலையாடவும்
கரைதொட்டு கூத்தாடவும்
சிலவேளை
ஆர்ப்பரித்து அடங்கிகிடக்கவும்
அடங்கிடமுடியாமல் பொங்கியெழவும்
கற்றுக்கொள்ளப் பழகிவிட்டால்

வாழ்க்கை கடலில்
வகைவகை அலைகளால் நாம்
வதைபடும்போதும் வேதனைப்படும்போதும்
வருத்தப்படாது  வா
வாழ்ந்ததிட துணியலாம்!

வலைக்குள் சிக்காத அலையென்னும்போதும்
வாழ்வையே வலையாக்கி
வளைத்திடத் துணியலாம்
அலைகடல் வாழ்க்கையை
அனுபவித்து வாழலாம்...

இக்கவிதை தமிழ்த்தேர் மாதஇதழில் மிக்கநன்றி வானலை வளர்தமிழ்.

நன்றிக்குறிப்பு/
மீண்டும் வலைச்சர அறிமுகம் மட்டற்ற சந்தோஷம்.
என்னை வலைச்சரத்தில்அறிமுகப்படுத்திய சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது