நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணத்தின் விளிம்பில்,




விதி முடியும் தருமிது
வாழ்க்கை வாழ நேரமில்லை
சதிராட்டம் ஆடியதெல்லாம்
சக்தியை தருவதில்லை
செய்தவைகள் கண்முன்னே
சுழல் காட்சிகளாய்
சுழன்றுவர
மாட்சிபெற கைகுப்பி
மண்டியிட்டு கேட்டாலும்
மரணமது விடுவதில்லை
மண்ணில்
மறுவாழ்க்கை வாழ
வழி தருவதில்லை
சதியென்ற போதினிலும்
விதியென்ற போதினிலும்
மரணம்வென்ற மதியில்லை
மரணமில்லாத ஜீவன்களில்லை
உலகில் உள்ள அத்தனைக்கும்
இங்கேயேயிருக்க அனுமதில்லை
இவ்வுலகமும் நிரந்தரமில்லை.
 ------------------------------------------

அகோர மரணம்
ஆபாச மரணம்
நடுவழியில் மரணம்
நாதியத்த மரணம்
இவையணைத்துமில்லா
இலகுவான மரணம்
எனைத்தழுவ வேண்டி
இருகண்கள் மூடி
இறைவனிடம் வேண்டி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொதியிழுக்கும் மனிதன்



குருதியின் கண்ணீராய்
வேர்வைத் துளிகள்
வேகாத வெயிலிலும்
தாங்காத குளிரிலும்
தன்னை வருத்திக்கொண்டு

குடும்ப மென்னும் கூடு
வறுமை யென்னும்
கிலிக்குள் சிக்காதிருக்க
வருத்தமதை தான் சகித்து
வசந்தமதை குடும்பம் சுகிக்க

நெஞ்ச டைக்கும் பாரம்
தாங்க முடியா துயரம்
மேனி தாளா வருத்தம்
எதையும் பொருட்படுத்தாது

பொதியிழுக்கும்
மாடாய் மனிதன்
காகிதமவனை ஆட்டுவிக்க
களி மண்ணை
சுமக்கும் நிலையில்

சூலைகளின்
சுவாலையில்
வேகும் செங்கற்கள்
கருகாது சிவந்திருக்கும்

ஏனெனில்
களிமண்ணுக்குள்
ஏழைகளின் உழைப்பு
செந்நீராய் கலந்திருக்கும்...


100, தாண்டி மீண்டும் 01 லிருந்து தொடங்கப்பட்ட
கவிதை வயலுக்காக இக்கவிதை. நன்றி சகோ றாபி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எது வேண்டும் உமக்கு



சோகம் சூழ்ந்துவிட்டதே
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்

கருணையாளனே
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?

இதயத்தை வாடவிட்டு
இதழ்களை கருக்குகிறாய்
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாய்?

படைத்தவன்
பாடம் நடத்தினான்

புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்

கண்ணீரை யொதிக்கி
புன்னகையை மட்டும் கேட்டு
கையேந்தி நிற்கும்
மானுடமே!

நீரில்லாமல்
பயிர் வளருமென்று நினைக்கும்
புத்திசாலியா நீ?

அரிசியில்லாமல்
சோறுண்ண எண்ணும்
அறிவாளியா நீ?

நீரில்லாமல்
அண்டமில்லை என்பதை அறிவாயா?
இவ்வுலகமே
நீரால்தான்
நிரப்பட்டுள்ளது என்பதை மறந்தாயா?

பனித்துளி
இயற்கையின் கண்ணீர்
மழைதுளி
வானின் கண்ணீர்
தேன்துளி
தேனியின் கண்ணீர்
வியர்வைத்துளி
உழைப்பின் [குருதியின்] கண்ணீர்

கண்ணீருக்குள் பல
காவியங்கள் நிரம்பியிருக்கிறது
கண்ணீரின் விளிம்பில்தான்
புன்னகையும் ஒளிந்திருக்கிறது

எது வேண்டும் உமக்கு
கண்ணீரா
புன்னகையா?

புன்னகையில்
ஈர்ப்பு மட்டுமே உள்ளது
ஆனால்
கண்ணீரில்
ஆளுமை உள்ளது
அதனை அறியத் தவறாதே!

புன்னகைகளை
இதழ்கள் நெடுநேரம்
தாங்காதே
புன்னகையில்
கண்ணீர்துளி தெளித்தால்
இதயமும் இதழும்
வாடாதே!

கண்ணீரை தந்துவிட்டேன் என
கலங்காதே
கண்ணீருக்கு பின்
கலகமும் தீருமென்பதையும்
மறவாதே!

ஆகவே
கண்ணீர் உனக்கு
ஆகாததல்ல
ஆதலால் அதனை வெருக்காதே
ஆகவே
நீயும் வருந்தாதே!
=========================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது