நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈழமா இருளும்!..

 
ஈழத்தில்
ஈரக்குலைகளெல்லாம்
இரத்தமற்று இறுகிக்கிடக்க
இரக்கமற்ற அரக்கர்களெல்லாம்
இறந்தவர்களின்மேல் ஆட்டம்போட!

இப்படியான கொடுமைகள்
எப்போதுதான் தீருமென
எங்கோயிருக்கும் 
ஈரல்களில்
ஈரம் ஊற்றெடுக்க!

அரசியலாகும் ஈழம்
அரசியலாக்கும் ஈனம்
அழுகுரல்களின் ஆலோழம்
அந்தி சாய்ந்தாலும் தீராதாம்

விடியலை  எதிர்பார்த்து
விடிய விடிய
விழித்திருக்கும் விழிகளுக்கும்
விழித்திரையிடும் கண்ணீர்களுக்கும்
விடிந்திடும் ஒரு நாள் கிழக்கு
முடிந்திடும் அன்றே 
கொடுமையின் வழக்கு

ஈசப்படைகள் நாசமித்துபோகும்
ஈழக்குழந்தைகள் 
தன் தேசமெங்கும் வாழும்
எப்போர் நடத்தினாலும்
அப்போரையும் வெல்லும்
ஏவுகனைகொண்டு 
காரிருளை வீசினாலும்
 ஈழமா இருளும்?

இருளையகற்றி தீப ஒளியேற்றத் தெரியும்
இயன்றளவு ஈழம் காக்க முடியும்
ஈழத்தில் இனி எந்நேரமும்
இருளுக்கில்லை வேலை
இரவு நேரத்தில் மட்டும் வந்து
ஈழக்குழந்தைகளை உறங்கவைத்து
இனிமையாக்கிடுமே நாளை!...
---------------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை ஈகரையின் கவிதைப்போட்டிக்காக எழுதியது.கவிதைப் போட்டியில் வெல்லமுடியாவிட்டாலும் கலந்துகொண்டமைக்கான மகிழ்ச்சியடைகிறேன். வித்தியாசமான 8 +8 தலைப்புகள் தந்தார்கள். அதில் 8 தலைப்புகள் நாமாக தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஒன்றுதான் இது.[மற்றவைகள் தொடரும்] 
போட்டியில் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

தமிழரின் பெருமை தழைத்து ஓங்கட்டும்.



உழைப்பு
உயர்வைத் தரும்
உழைக்காதோருக்கு
உடலும்
உள்ளமும் சோர்வைத் தரும்

ஒருவர் உண்டு மகிழ
இன்னொருவருரின்
வேர்வைகளை
விதையாக்கி உழுதிட

அது நெல்லாகி
அறுவடையாகி
அரை சாண் வயிற்றை
ஆனந்தப்படுத்த
சோறாகி சுகம்தரும்...

 இது சென்ற வருடம் எழுதியது..

தை திங்கள் வந்தது
தமிழருக்கு மகிழ்வைத் தந்தது

ஏர்பிடித்து உழுதிடும்
உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
 ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

உழைப்பவரின் மனதினை
உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

விஞ்ஞானங்கள் பல வந்தாலும் -இந்த
விவசாயின் வேர்வைக்குத் தனி
விலைமதிப்புள்ளதென்பதைச் சொல்ல
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

ஐந்தறிவு ஜீவன்களுக்கும் அலங்காரம்
அது விளங்கா போதிலும்
அதற்கும் மதிப்பளிக்க
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

கரும்பும் மஞ்சளும் மங்களமாய் இனித்திட
கன்னிகள் சத்தம் களைக்கட்டிட
கூட்டமாக கூட்டமாய் கூட்டாஞ்சோறு
கூடிப் பொங்கி உண்டிட
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
ஏழைகளற்று ஏற்றம் பெருகிட

ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
எல்லாம் வல்ல இறைவனை தொழுது
என்றும் கேட்போமே இனியபொழுது....

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். 
தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
உளமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய

மெளனத்தின் வெளிப்பாடு..


உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது

அர்த்த ஜாமத்தில்
அனைத்துமே
அடங்கிக் கிடக்கும்போது
அலறத்துடிக்கிறது மெளனம்
ஆனபோதும்
அர்த்தங்களற்ற செயல்களாகி
அமைதி காத்துகிடக்கிறது
ஆழ்மனதின் அர்த்தமறிந்து

பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது