நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் மனவானில்


அடியே காதலியே
அன்பான தேவதையே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

வார்த்தையும் வாழ்க்கையும்




வார்த்தை மிக வலிமையானது
ஒரு வார்த்தைதானே என்று வீணடித்து விடாதே
அது உன் வாழ்க்கையாகவும் இருக்கலாம்

உதிர்க்கும் வார்த்தையை உயர்ந்ததாக உதிரப்பழகு
பிறரை உருக்குலைக்கும்படியாக செய்துவிடாதே

உன் வார்த்தையில் வலியும் உண்டு வாஞ்சையும் உண்டு
அதை நீ பயன்படுத்தும் முறையில், வாஞ்சையே மேன்மை

வார்த்தை அம்பு போன்றது அதை செலுத்தும்முறை
தெரியாவிட்டால் விட்டவனிடமே வந்து சேரும்

ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தைக் கொல்லும் என்பார்கள்


நம் வார்த்தை நம்மை வெல்ல வைக்காவிட்டாலும்
பிறரை கொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

வார்த்தை நெருப்பைவிட மோசமானது தவறான
ஒரு சொல் சுற்றத்தையே சுட்டெறித்துவிடும்

நம்மிடம் வார்த்தை சுத்தமாக இருக்கவேண்டும்
வார்த்தைதவறியவன் தன்னிலிருந்து ஒருபடி கீழிறங்கிவிடுகிறான்

ஒரு வார்த்தைதானே என நினைத்தால்
அது நம் வாழ்க்கையையே மாற்றிவிடும்

ஒரு பொன்தானே தவறிவிட்டால் என்ன விடுவோமா?
அதைவிட பலமடங்கு மேன்மையானது வார்த்தை

வாயிலிருந்து வழுக்கிவிழும் வார்த்தை
வாளைவிடக் கூர்மையானது

வார்த்தைகளை வசப்படுத்த தவறியன்
வாழ்க்கையை வழுவிலக்கச்செய்கிறான்

வார்த்தைக்குள்தான் வாழ்க்கை இருக்கிறது
ஆதலால்
வார்த்தைகளை உதிர்ப்பதற்கு முன்னால்

ஒருமுறைக்கு பலமுறை யோசி
வாழ்க்கை வாழ்வது ஈசி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தகுமோ



வானத்தின் நிலப்பரப்பில்
பலவண்ண நிறங்களை நிரப்பி
வில்லாய் வளைந்திருந்த
வானவில்லை பார்த்ததும்
விசுக்கென்று வந்தது -இளம்
விதவைக்குக்கோபம்

சட்டென்று  பார்வையை உயர்த்தி
சஞ்சலத்தோடு பேசினாள் 
சற்றுநேரத்திற்கு
வந்துபோகும் உனக்கே
பலவர்ணங்களிலும்
பட்டாபிஷேகம்   

ஆனால்  என்னைப்பார்!

பலவண்ண நிறத்தையும்
துறந்து
பால்வண்ண வெள்ளையை
அணிந்து
மனதில் சோகங்களை
சுமந்து
பட்டுப்போனபூவாய்
பரிதவித்து நிற்கிறேன்
என்று...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது