நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பூட்டிவிட்டேன் உனை வைத்து.



அன்பான காதலனே
ஆருயிர் மன்னவனே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்

நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை
உலுக்கி -அதிலுதிர்ந்த
உணர்வுகளை
உதிராமல் கோத்தாய்!

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி-அதை
தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்!

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்!

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை ஏன் கேட்கிறாய்!

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடப்போடா காதலனே!
என்றுமே நீதான்
என் கணவனே!

இது நான் 2009 நவம்பர் மாதம் 3 ந்தேதி எழுதியது. அதிலிருந்து இதில் சின்ன மாற்றம் செய்து வெளியிட்டுள்ளேன். அது என்னான்னு கண்டுபிடிங்க..
 கண்டுபிடி கண்டுபிடி அட சும்மாதான். கண்டு பிடிங்களேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பழுக்காத இலையொன்று!



தேடியெடுத்த வாழ்க்கை
தோற்றுவிட்டதாய் எண்ணி
வழக்கில் விட்டபோது
வாழ்ந்த வாழ்க்கையின்
வகைகளை சொல்ல வழியின்றி
வார்த்தைகள் சிறைப்பட்டுக்கிடந்தன

வாய்தாக்கள் வாங்காமல்
வழக்கு முடிவடைந்ததும்
வழக்கத்திற்க்கு மாறாக
வாக்குவாதமேயில்லாமல் நான்கு
விழிகளும் விசாரித்துக்கொண்டன

பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வந்தபோது -இதுவரை
சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய வாழ்வையெண்ணி

பழுக்காத இலையொன்று
பட்டென எழுந்த காற்றில்
படபடத்து கீழே விழுந்து
பரிதவித்து போய்
பட்டமரநிழலில் ஒதுங்கியதுபோல்

பிரியம் அவநம்பிக்கையானபோது
பாசம் பொய்த்தபோது
நேசம் வேசம் கலைத்தபோது
நிம்மதி நெடுந்தூரம் போனபோது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்றபோது

அவமானங்களை சுமந்தபடி
அடிநெஞ்சு கனத்தபடி
அச்சத்தோடு வாழ்வது சரியல்லவென்று
அச்சடித்த காகிதத்தின் அடியில்
அச்சுப் பிசகாமல் அப்படியே

விவாகத்தின்போது
அன்பினாலிட்ட  கையெழுத்தை
விவாகரத்தின்போதும்
அன்பைவெருதிட்டது
விரல்கள் விரும்பாமலே
விரக்தியான மனதோடு...

இக்கவிதை எழுத்து.காமில் வெளியாகியுள்ளது
 எழுத்து.காமிற்க்கு எனது நன்றிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது