நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஊடகம்..



நல்லதை நாடறிச்செய்யும்
நற்போக்குவாதி!
தீயதை சுட்டிக்காட்டியெரிக்கும்
நெற்றிகண்யோகி!

நலவையும் எழவாய்க் காட்டி
எழவையும் நலவாய்க் காட்டும்
எந்திரப்பேனா!
நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி
நடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்
மாய மை!

ஊடலென்ன கூடலென்ன
ஊர்வம்பை விலைக்கு வாங்கி
உண்மையென்றும் பொய்மையென்றும்
ஊதலில்லாமலே
ஊதிப் பெரிதாக்கிடும் ஊதல்!

காதலென்றும் காமமென்றும்
கதைகள்பல திரித்து
கருவிலிருக்கும் சதை பிண்டத்திற்க்கும்
கண்வைத்து கைகால் வைத்து
களியையும் கல்லாய் செதுக்கும் சிற்பி!

விற்பனைக்காக வில்லங்கத்தையும்
வீணாப்போனவைகளையும்
விலையில்லாமலே வாங்கும் அதிபுத்திசாலி
காசுக்காக கழிசடைகளையும்
காட்சிப்பொருளாக்கும் விலையுள்ள கண்காட்சி!

உள்ளதை உள்ளபடி
உலகுக்கு எடுத்துரைத்து
உண்மைகளை மறைத்திடாத
நியாயத் தராசு!

நல்லவைகளை நாகரீகமாய்
வெளிச்சம் போட்டுக்காட்டி
நியாயமாக அலசி ஆராய்ந்து
வெளியிட்டுத் திறமையைக்காட்டும்
நேர்மையான நீதி!

இவையெல்லாம் அடங்கிய
உலகெங்குமுள்ள ஊடகங்களின்
உன்னத போக்கு
உண்மையின் உறைவிடமாக
ஏற்றத் தாழ்வுகளில்லாமல்
எல்லோருக்கும் சரிசமமாக
ஊர்வலம் வந்தால்
இவ்வுலகமே அறியும்
உண்மையின் நாக்கை!....

காயல்பட்டினத்தில் 15 வது இஸ்லாமிய இலக்கிய மாநாடு.
40  வரிகளில் ஊடகம் எனும் தலைப்பில் கவிதை எழுதச்சொல்லி காக்கா அனுப்பிய மெயிலுக்கு நான் அனுப்பிய கவிதை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

19 கருத்துகள்:

  1. அசத்தல் கவிதை சகோ.. தமிழ் விளையாடி இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. கவிதையின் ஒவ்வொரு வரிகளும் வைரம் போல ஜொலிக்கின்றன.

    நிச்சயமாக மாநாட்டில் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு ’ஊடகம்’ மூலம் அறிவிப்பு வரும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ///நலவையும் எழவாய்க் காட்டி
    எழவையும் நலவாய்க் காட்டும்
    எந்திரப்பேனா!
    நடக்காத ஒன்றை நடத்திக்காட்டி
    நடந்த ஒன்றை மறைத்துக் காட்டும்
    மாய மை!/// அசத்திறிங்க ...

    பதிலளிநீக்கு
  4. ஊடகத்தை ஊடுருவியா
    உணர்வு மிக்க
    உண்மை வார்த்தைகள்
    வலிமையான வரிகளில்
    வசத்தமாய்
    வந்து போகிறது
    சமூக அக்கறை

    பதிலளிநீக்கு
  5. ஊடகத்தின் நல்லது கெட்டது சொல்லும் நல்கவிதை.

    பதிலளிநீக்கு
  6. சிறந்த வரிகள் கொண்ட கவிதை ...

    பதிலளிநீக்கு
  7. ஊடகங்களும் வியாபர நோக்கோடு ஒருபக்கச் சார்பாகத்தான் இப்பலாம்.சில ஊடகங்கள் மட்டுமே விதிவிலக்கு.ஆனால் அவைகள் எப்போதும் மிரட்டப்பட்டபடிதான் !

    பதிலளிநீக்கு
  8. நல்ல கற்பனை.நல்ல கவிதை..?!சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. ஊடகத்தைப் பற்றிய பரந்து பட்ட பார்வையில் உங்கள் கவிதை வந்திருக்கிறது.

    அடிக்கடி டெம்பிளேட் மாத்துறீங்க. அருமையாக இருக்கிறது நீல வர்ணம்.

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும். நலமா சகோதரி! நீண்ட நாள் வராமல் இருந்தேன் ஆனாலும் எவ்வளவு வேலைப்பளுவிலும் உங்கள் கவிதைகளை வாசிக்காமல் இருந்ததில்லை. இந்த கவிதை உங்கள்கவி ஆக்கத்தின் ஒரு மாணிக்க கல். இதுபோல் ஊடகத்தை நானும் எழுதியிருக்கிறேன் . ஆனாலும் உங்களைப்போல் முடியுமா? மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா? முயற்சிக்கிறேன். நல்ல தொரு அர்தம் பொதிந்த சொல்லாடல். சாட்டை அடி,தாலட்டும்,தேள் கொட்டும் சரிவீதத்தில் கலந்து கொடுத்த கவிதை. வாழ்துக்கள். எங்களையும் கொஞ்சம் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. உலகத்தோர் வீட்டுப்பெண்.
    ஊராரின் வீட்டுப்பெண்..
    ஊரைவிட்டு ஓடிவிட்டால்..

    தலைப்புச் செய்தியாய்...
    அண்மைச் செய்தியாய்
    வெளியிடும் ஊடகம்...!

    தன் வீட்டுப்பெண் ஓடினால்...
    தலைப்புச்செய்தியாய்
    அண்மைச்செய்தியாய் வெளியிடாமல்
    ஊருக்குத் தெரியாமல் மறைக்கும்
    என் நாட்டு "பத்திரிகா தர்மம்"...!

    முதல் செய்தியில் ஓடியது யார்வீட்டுப் பெண்ணோ...!
    ஆனால்...
    அடுத்த செய்தியில் ஓடியது
    தன் வீட்டுப் பெண்ணல்லவா...!
    மானம்...
    கப்பல்... அல்ல அல்ல...
    விமானம் ஏறிப்போகும் என்பதால்
    அசலான் வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும்...
    அசல
    "அக்மார்க்" வியாபாரிகள்....!

    கல்யாண வீடாய் இருந்தால் மனமகனாயும்
    இழவு வீடாய் இருந்தால் பிணமாயும்
    முதன்மையாய் இருக்க நினைக்கும்
    "மீடியா" எனும் "ஊடக"
    பச்சை வியாபாரிகள்...!


    மறைமுகமாய் நடக்கும்
    அசிங்கங்களை
    சிறியவர் முதல் பெரியவர் வரை
    அனைவரயும்....
    என்நாட்டு
    எதிர்கால சந்ததினரை
    கெடுத்து...!
    குட்டிச்சுவராக்கி
    சமூகத்தை கெடுத்துகொண்டிருக்கும்
    சமூக அவலம்
    இந்த ஆதிக்க
    இனத்தின் பிடியில் இருக்கும்
    "மீடியா எனும் ஊடகம்"....!


    கவிதை அருமை...!
    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  12. ஊடகத்தின் இரு நிலைகளையும்
    மிகச் சரியாக கவியாக படைத்துள்ளீர்கள்
    ஊடகங்களும் இப்படி சம நிலையில் இருந்தால்
    பாதி பிரச்சனைகள் காணாமலேயே போய்விடும்
    சுப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமையோ அருமை...........
    அழகிய வரிகள் பிடிச்சிருக்குங்க....

    நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி...
    நலம்தானே!!

    நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. உணர்வுகளின் வெளிபாடாய் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்ட நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    சில ஊடகங்களின் பொடுபோக்குதன்மை. மற்றும் சிலரை உயர்த்துவதும் சிலரை தாழ்த்துவதும் இது சரியான நிகழ்வல்ல.

    எதை முதன்மை செய்தியாக்கவேண்டுமோ அதை கடைபக்கதிலும். எதை கடைசிபக்கத்தில் வரனுமோ அதை முதன்மையாகவும் வெளீயிட்டு தங்களீன் தரத்தை தாங்களே குறைத்துக்கொள்வதும் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று.

    ஊடங்களின் தரம் குறையாமல் யாருக்கும் பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் சரிசமமாக என்று ஊடகம் உலாவருகிறதோ அன்றுதான் சமுதாயம் சீராக இயங்கும்.

    தற்காலத்திலுள்ளவர்களுக்கு அனைத்தையும் எவ்வழியிலோ அறிந்துகொண்டுதானுள்ளார்கள்.

    ஆகவே நியாயமான முறையில் நேர்மையாக எழுதானியும் செயலாணியும் அமைந்தால் அதுவே சிறந்ததாக அமையும்..

    பதிலளிநீக்கு
  15. /அடிக்கடி டெம்பிளேட் மாத்துறீங்க. அருமையாக இருக்கிறது நீல வர்ணம்.//

    அப்படிமாற்றுவதால் தளத்திற்கு ஏதும் பிரச்சனையுண்டா நிரூபன்.இருந்தால் சொன்னால் இனி செய்யமாட்டேனுல்ல.

    நீலம் பிடிச்சிருக்கா! சந்தோஷம்..
    என் மகனுக்கு இவ்வர்ணம் ரொம்ப பிடிக்கும்..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  16. //இதுபோல் ஊடகத்தை நானும் எழுதியிருக்கிறேன் . ஆனாலும் உங்களைப்போல் முடியுமா? மாகவி நீங்க நாங்க உங்க கவியை படிக்கவே எங்களை தகுதியாக்கிகொள்ளனும் அது முடியுமா? முயற்சிக்கிறேன்.//

    ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஏன் சகோ. இப்படியெல்லாம்.. கவியாங்கிறதே தெரியலை இதில் மாகவியா. இதெல்லாம் கேட்டா என்னை அடிக்க வரப்போறாங்கப்பு..

    நீங்களெல்லாம் எங்கே நான் எங்கே.

    பதிலளிநீக்கு
  17. ’புழுங்கும் மலர்’ ஐக்காணாது
    அந்த மலர் மட்டுமின்றி நாங்களுமல்லவா
    புழுங்குகிறோம்!

    என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  18. உள்ளதை உள்ளபடி
    உலகுக்கு எடுத்துரைத்து
    உண்மைகளை மறைத்திடாத
    நியாயத் தராசு!//

    சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. நல்லதை நாடறிச்செய்யும்
    நற்போக்குவாதி!
    நல்லதை நாடி அல்லவை அகற்றி பல்சுவை கூட்டி பகிர்ந்தளிக்கும் பண்பாளர் பத்தும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது