நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வாழ்க்கையென்னும் நூலில்


துரத்தி ஓடுகிறேன்
நிலாவோடு ”நிழலும்” ஒளிந்து கொள்கிறது

கண்கண்டு ஓடுகிறேன்
காணாமல் ”கானல்”  மறைகிறது

அன்பைத் தேடுகிறேன்
அதுவும் ”அழகிய” வேடமிடுகிறது

வலிதெரியாமல் நடிக்கிறேன்
வழியவந்து ”வருத்தி” வலிக்கவைக்கிறது

நீர்குமிழியாய்
உடைந்துகொண்டே இருக்கிறேன்
உமிழ்நீராய் சோகம்
சுரந்துகொண்டே இருக்கிறது

என் அறையெங்கும் ஆன்மா 
அலறும் சத்தம் கேட்கிறது-அதனை
அமைதிப்படுத்தத் தெரியாமல்
அதனோடு சேர்ந்து 
என் அணுக்களும் அலறுகிறது!


வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல 
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது

இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
விட்டு விட்டு சிரித்தழுகிறது!

டிஸ்கி///
நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிலளிப்பதில்லை அனைவரும் என்னை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருத்துரைக்களுக்கும் பதிலளிப்பேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பார்வையின் பதியல்

svr.pamini 



புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது

உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது

உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது

பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது

பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
 இமையசைக்காது இருவிழிகளை
 நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது