கண்டேன் கண்டேன்
மரணத்தைக் கண்டேன்
கண்ணிரெண்டும் அசைக்காமல்
கண்ணெதிரே கண்டேன்
மரணித்த முகமதனின்
நேரெதிரே நின்று
நடப்பதத்தனையும்
நகராமல் கண்டேன்
ஓடியாடியக் கால்களிரெண்டும்
ஓய்வுபெறவே -அதனிரு
பெருவிரல்களும்
ஒருசேரக் கட்டக்கண்டேன்
கண்ட காட்சிகளெல்லாம்
கண்ட கண்கள் களைத்துபோய்
இறுக்கிமூடி
இளைப்பாறக் கண்டேன்
ஓயாது பேசிய வாயோ
ஒரு அசைவுமில்லாது -பசைதடவி
ஒட்டியதுபோல்
ஒட்டிக் கிடக்கக் கண்டேன்
உயிர்க் காற்றை சுவாசித்த
இதயமது
இயங்காது நின்றிடவே
உயிரது வெளியேறி
உடலது உருமாறி
வெற்றுடலாய்
வீற்றிறுக்கக் கண்டேன்
சுற்றங்கள் சுற்றியமர்ந்து
சோகமதை வெளிப்படுத்த
இருந்தநொடி இல்லாத பாசம்
இறந்தநொடி
இலந்தைக் கொடியாய் படர
இதுதான் மனிதனது வாழ்க்கை
இதற்குத்தான் இத்தனை இன்னல்
இதையெல்லாம் அறிந்திருந்தும்கூட
இப்படியே வாழ்கிறோமோ நாளும்
மரணத்தை மறந்த நாமும்
மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
மரணத்தை நினைத்தபடியே
மனிதனாய் வாழநினைப்போமா.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.