பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது
பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா
பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது
நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா
அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது
மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
மனிதர்களைக்கொல்கிறது
சுயநலங்கள் பெருகிப்போனதாலா
சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது
வெக்கம் விட்டுபோனதாலா
வைரமாகக்கூடிய மங்கைகூட
விலைமகளாகிப்போகிறது
தன்னம்பிக்கை குறைந்துபோனதாலா
தற்கொலைகள் தலைதூக்கி நிற்கிறது
மனஇச்சைகளுக்கு மதிப்புகொடுப்பதாலா
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறது
வஞ்சனைகுணம் பெருகிப்போனதாலா
பிறரை வதைக்கும் வட்டிக்கு
வட்டிபோட்டு வாங்குகிறது
அறிவு அளவுக்குமேல் வளர்ந்தாலா
அழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டே போகிறது
இன்னும்
வினாக்கள் விளைந்துகொண்டேதான்
இருக்கிறது இருந்தாலும்
இதற்காவது விடை கிடைக்குமா என்ற
ஆதங்கத்துடன் விடை பெறுகிறேன்..
அமீரகத்தில் வெளியாகும் மாதஇதழான தமிழ்தேர் இதழில் வெளியாகியுள்ள
”வினாவும் விடையும்” என்ற இம்மாத தலைப்பிற்கான என்கவிதை.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்