நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறுதியின் விளிம்பில்






நொடிகளும் நிமிடங்களும்
நாட்களும் மாதங்களும்
வெகுசீக்கிரம் உருண்டோடி
வருடத்தின் விளிம்பில் நின்றபடி
கடந்துவந்தவைகளை மனம்
கலைத்துப்போட்டு நினைக்குதடி!

கசப்புகளும் கஷ்டங்களும்
கலக்கத்தை கொண்டதோ!
சோகங்களும் வருத்தங்களும்
சோர்வுகளை தந்ததோ!
அழுகைகளும் ஆராரணங்களும்
ஆழ்மனம் உண்டதோ!

மகிழ்வுகளும் தித்திப்புகளும்
மனமேற்றுக் திளைத்ததோ! - சில
சந்தோஷங்களும் சகிப்புகளும்
சாந்தியாகி நின்றதோ!
பூரிப்புகளும் புன்னகைகளும்
பூந்தோட்டவாசம் வீசியதோ!

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவையே!
ஏனோ அவற்றில்
அல்லவைகளும் அண்டிக்கொண்டு
அனுதினமும்
அவதிக்குள்ளாக்கின!

எல்லாம் அன்பல்ல என்பதை
எடுத்துரைத்தவைகளும்
எல்லாமும் நன்மையல்ல என்பதை
அடித்துரைத்தவைகளும்
எல்லாத்திலும் தீமையுமுண்டு என்பதை
படிப்பினை தந்தவைகளுமாய்!

செய்தவைகளில் ஒன்றும்
சொல்லும்படியாக இல்லையோ
சொல்லியவைகளில் எதுவும்
செய்யமுடியவில்லையோ!
சொற்ச்செயல் எவற்றிலும்
சிறப்புகள் பதியவில்லையோ!

உலக நடப்புகளில்
ஓங்கிப்பெருகும் குற்றங்களும்
ஊர்த்தெரு பழக்கங்களில்
ஒய்யாரமிடும் தீங்குகளும்
தனிமனித ஒழுக்கங்களில்
தரம்குறையும் நடத்தைகளும்!

நகர்ந்த நாட்களிலோ
நடைபயின்ற வருடத்திலோ
குறைகளேதுமில்லை!
நாட்களில் நகர்ந்த
வருடங்களில் நடைபயின்ற
மனிதர்களிடமும் மனங்களிலும்
பலகுறைகள் பெருந்திரைகள்

இனிவரும் வருடத்திலாவது
இன்னலில்லா நல்லவைகளையே
சொல்லிலும் செயலிலும் எல்லாரும்
சிறப்பாய் செய்தருள
சங்கைமிகு இறைவனிடம்
சிரம்தாழ்த்தி கேட்கிறேன்...
 =================================


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது