
புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது
உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது
உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது
பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது
பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
இமையசைக்காது இருவிழிகளை
நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.