ஊமையான உணர்வுகள்..
ஒரேஒரு கிளிக்
நரம்பருந்த வீணைபோல்
நாதமிழந்த சந்தங்களாய்
நாட்டியத்தின்போது
அறுத்துக்கொண்ட சலங்கைகளாய்
நயமிழந்து, சுதிகுறைந்து,
சுகவீனமாய் சுருளும் உள்ளம்
அறுத்து ஓடும் ரத்தம்போல்
ஆழ்மனதில் ஓடிடும் ஆரா ரணம்
ஆற்றவும் தேற்றவும் ஆளில்லாமல்
அயர்ந்து சோர்ந்து திண்டாடும் தினம்
சுகங்களை இழந்த சோலைகள்போல
சோகங்கள் சூழ்ந்த இருளின் தேகம்
சுற்றமிருந்தும் சொந்தமில்லாமல்
சுகமாய் இருபதாய் நாளும் நடிக்கும்முகம்
வித வித கனவுகள் கண்ட வாழ்க்கை
விதிவழியைக் கடந்து வேகமாய் ஓட
வாழ்க்கையின் அர்த்தம் விளங்க மறுத்து
வசைவுகள் நாளும் வாங்கிக் குவித்து
விபரமறியா குழந்தையாகி
விம்மி விம்மி வெதும்பும் மனம்
வெடித்து சிதறும் மனதின் உணர்வு-அதை
வெளியே சொல்லா முகத்தின் அறிவு
விடியும் தருவாய் எதிர்நோக்கி
வெளிச்சம் தேடும் விசித்திர நெஞ்சம்
மனமிணையாத மணக்கோலம்
மார்பைத் தாக்கும் வீசிய சொல்லும்
மரபுகளென்று வகுத்த கோலம்
மல்லுக்கு நிப்பதோ விதண்டாவாதமென்று
மறைத்து வாழும் மங்கைகள் ஏராளம்
ஊமையின் கனவு ஊமையாகும்
ஊரறிச் செய்தால் கேலியாகும்
உலகம் சுற்றும் வரையில் ஊர்கோலம்
ஊர்வசிகளின் உள்ளத்தில்
உணர்வுகளின் தேக்கம்
உதறி வெடித்தால் சிதறிப்போகும்
சிதையவும் வழியில்லை சீரழிய மனமில்லை
சிந்தும் கண்ணீரில் சிறுதுளியும் பொய்யில்லை
சீராகும் வாழ்க்கையென்ற சீரிய எண்ணத்தில்
சிறக்கிருந்தும் பறக்காமல் சிறைக்குள் பறவைகள்
பாவம் பாவைகள் படிதாண்டா பேதகைகள்
பதறும் மனங்கள்கொண்டு அல்லாடும் கோழைகள்
பாசமற்ற புழுக்கதிற்குள் மாட்டிக்கொண்ட கோதைகள்
பாழும் உலகினில் படுகிறதே பல பலவேதனைகள்...
டிஸ்கி.//என்னுடைய இந்த கவிதை தமிழ்குறிஞ்யில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)