சத்தமில்லா முத்தங்களை
சத்தத்தோடு முத்தமிட்டு
சப்த நாடியிலும்
சப்த ஸ்வரங்கள் எழுப்பும்
எழுத்து முத்தம்!
முத்தமிடும்போது
சத்தமிட்டுக்கொண்டே
சப்தநாடியையும்
சப்தமில்லாமல் அடக்கும்
இதழ் முத்தம்!
நாசியின் வழியே
சுவாசித்து இழுக்கும்போது
ரத்த நாளங்களுக்குள்ளும்
ரம்யம் ஏற்படுத்தும்
நுகரும் முத்தம்!
உயிரெழுத்தும்
மெய்யெழுத்தும்
உயிர்மெய்யெழுத்தாய் இணைந்து
ஒருவாக்கியம் உருவாவதுபோல்,
எம்முத்தம் என்றபோதும்
அம்முத்தம் அமுதமாகி
அடிநெஞ்சினுள் ஆளப்பதிந்து
அன்புதன்னை அதிகமாக்கும்!
குழந்தைதொட்டு குமரிவரை
கனிவுதொட்டு முடிவுவரை
முத்தங்களுக்கு
முதுமையேயில்லை!
முத்தங்களில்லா வாழ்க்கை
முழுமையடைவதில்லை
மனிதவாழ்வில் மரணம் வரும்வரை
முத்தங்களுக்கு என்றுமே
முற்றுப்புள்ளியில்லை..
டிஸ்கி// இக்கவிதை இலண்டன் வானொலிக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.