நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காற்றோடு கலந்து





அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே
காற்றா”டி”நீ இத்தனை சுகந்தம் உனக்குள் என்று

இதோ கடல்கடந்துவந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
சுற்றிவரும்காற்றை சுவாசித்தபின்
நீவிடும்மூச்சுக்காற்று எனைவந்து சேர்வதால்

பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்பட்டுத்தோள்களை உரசும்போது நீ
என் தோளில் சாய்வதுபோல் உணர்கிறேன் –இதே
நிலையில்தான்  நீயும் எனை  நினைப்பாய் என்று நம்புகிறேன்

குளிர்காற்று என் கைகளுக்குள் குளிரூட்டும்போது
நீ என் கைகோர்த்து நடக்கிறாய்என்றெண்ணி என்கைகளை
இயல்பாகவே இறுக்கிக்கொள்கிறேன் -இதே
உணர்வைதான் நீயும் உணர்வாய் என நினைக்கிறேன்

அனல்காற்று அடிக்கும்போது நீ என்மேல்
கொஞ்சம் கோபம் படுகிறாய் என
நானும் முகத்தை திருப்புகிறேன் கொஞ்சும் கோபமாய்-இதே
நிலமைதான் அங்கும் என எண்ணிக்கொள்கிறேன்

சூராவளிக்காற்று சுழண்டு வீசும்போது
நான் தவறு செய்துவிட்டேனோ
என நினைத்துக்கொள்கிறேன்-இதே
நிலவரம்தான் அங்கும் என எண்ணம் கொள்கிறேன்

துள்ளித்திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே அயல்நாட்டில் வசிக்கிறேன்

ஆன்மாவிற்குள் ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே அருகே நீ இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு ஆறுதல்சொல்கிறேன்

எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்
அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி
சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்

காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..

நட்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது