நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..


உணர்வுகளின் ஓசைக்கு அன்போடு வாழ்த்துரை வழங்கிய சகோதரர். நர்கீஸ் இதழ் கெளரவ ஆசிரியரும் மற்றும் பிரபல இஸ்லாமிய நாவலாசிரியருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதுமான நன்றிகள்.

திருச்சி எழுத்தாளர் அண்ணன் சையத் அவர்கள் சொல்லி மெயில்வழியே அறிமுகமான சகோதரர் அவர்கள்தான் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள். நர்கீஸ் நடத்திய சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள எனது கவிதைகளை கடைசி நிமிடத்தில்தான் அனுப்பினேன். அதில் ஆறுதல் பரிசுகளாக  இரு கவிதைகளுக்கு 2000ம் பெற்றேன். அவர்களின் சகோதரத்துவமான தொடர்புகள் மெயில்வழியே தொடர்ந்தது, அப்போதுதான் எனது முதல் கவிதை நூலுக்கு அவர்களிடம் வாழ்த்துரை வாங்க நினைத்து மெயில் அனுப்பினேன். மறுப்பேதும் சொல்லாமல் என் கவிதைகளை அனுப்பச்சொன்னார்கள். அனுப்பியதும் அதற்கான வாழ்த்துரை என் உணர்வுகளுக்கு வந்தது. அதனைக்கண்டதும் இரட்டிப்பு சந்தோஷம் ஏன் தெரியுமா? எனது மச்சானைப்பற்றி அவர்கள் அதில் குறிப்பிட்டு இருந்ததுதான்.

ஒளிதரும் வெளிச்சத்தைதான் பார்க்கிறோம் அதற்காக உருகும் மெழுகையாரும் உணர்வதில்லை. ஆனால் அதை உணர்த்தும் விதமாக சகோதரர் அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தது நெஞ்சுக்குள் மகிழ்வை குளிரச்செய்தது.அவர்களின் நல்ல மனதிற்க்கு இறைவன் அவர்களுக்கு ஈருலகிலும் நற்பாக்கியத்தை வழங்குவானாக..

இதோ அவர்கள் வழங்கிய வாழ்த்துரை..

சகோதரி மலிக்காவின் கவிதைகள் சமீபத்தில்தான் அறிமுகம்.


நர்கிஸ் இதழ்- மல்லாரிபதிப்பகம் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் கடைசி நேரத்தில் அவர் கலந்து கொண்டார்; ஆறுதல் பரிசுகளையும் வென்றார்.


இப்போது தினமும் அவரது பழைய - புதிய கவிதைகளை வலைத்தளத்தில் வாசிக்கிறேன் என்பதை விட வாசிக்க வைக்கிறார் என்பேன்.


அவரது சுறுசுறுப்பு வியக்கவைக்கிறது!எளிய வார்த்தைகளில் அவர் பேசுகிற கருத்தாக்கம் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது!


'உரிய வாய்ப்புகள் தரப்பட்டால் முஸ்லிம் பெண்கள் குடும்பத்தின் 'சுமை'யாக இல்லாமல், 'சொத்தா'க மாறுவார்கள்' என்று 35 ஆண்டுகளுக்கு முன் நானும் என்னைப் போன்றவர்களும் எழுதியபோது/ பேசியபோது சிலர் இளக்காரமாகப் புன்னகைப்பார்கள். ஆனால், இப்போது அந்த நிலை வெகுவாக மாறியிருக்கிறது!


தங்கை மலிக்காவின் கணவரை நான் பெரிதும் பாராட்டுகிறேன். பல ஆயிரம் சரசரிகளுக்கு மத்தியில் அவர் ஓர் அபூர்வ மனிதர்!


மலிக்காவை - அவரது திறமையை அறிந்து இயல்பாக இயங்க விட்டமைக்காக எத்தனை பேர் பரிகசித்திருப்பார்கள் என்பதை என்னால் யூகிக்கமுடியும்.


எத்தனை பாத்திமாக்கள், ஆமினாக்கள், ஹாஜராக்கள், ஜரீனாக்கள் எழுத்துலகத் தொடுவானத்தில் பளிச்சிட்டு -மிகப் பெரிய எதிர்காலத்துக்கு முன்னுரை எழுதியும்,திருமணத்துக்குப் பின் காணாமல் போனார்கள், வாழப்போன வீடுகளின் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் இல்லாமையால் என்பதை நான் நன்கு அறிந்தவன் என்பதால், மலிக்காவின் கணவர் நம் நன்றிக்குரியவர் என உரக்க முழங்குகிறேன்.


எழுத அனுமதித்ததுடன், அவரது ஆக்கங்களை நூலாக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


உளம் நெகிழ வாழ்த்துகிறேன்; தங்கை மலிக்காவின் எழுத்துல வெற்றிக்கு என்னுடைய பிரார்த்தனைகள்!

மிக்க அன்புடன்...
ஹிமானா சையத்
சிங்கப்பூர்
+65- 92717237
himanasyed@yahoo.com
himanasyed@gmail.com

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

சஞ்சாரமிடும் நினைவுகள்.



வான நிலப்பரப்பில்
மின்னல் கீற்றில்
முடைந்த பாயொன்றை
மெல்ல விரித்து
மெளனப் புன்னகை பூத்தபடி
முகங் கவிழ்ந்து கிடக்கிறேன்

ஒவ்வொரு நட்சத்திரங்களும்
ஒளிக் கதிர்களை பாய்ச்சிட
உன்பார்வை தந்த ஸ்பரிசங்கள்
உள்நெஞ்சில் ஊஞ்சலாட
உள்ரங்க அறைகளெல்லாம்
ஒளிவெள்ளம் பரவக் காண்கிறேன்

வனாந்திரக் காட்டில்
வாகை சூடிய மேகங்கள்
வலம் வரும் வேளையில்
வண்ண மயிலொன்று
தோகை விரித்தாடும் நிலையில்
துள்ளியாடி மகிழ்கின்றேன்

மெளனங்கள் மேடையமைத்து
மொழிபெயர்த்து வாசிப்பதை
முற்றத்து நிலவாகி பார்த்து
மூங்கில் காதுகொண்டு கேட்டு
மெல்ல மெல்ல ரசித்து
மெய்மறந்து சிரிக்கின்றேன்

வளமில்லா வயல்கள்
வாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்

சஞ்சாரமிடும் நினைவுகளில்
சல்லடையாக்கி போகின்றேன்
சாரல்கொண்ட தூறலிலும்
சந்தோஷமாய் நனைகின்றேன்
சருகுகளின் சத்ததிலும்
சங்கீத ஒலி கேட்கின்றேன்

இவையத்தனையும் உணருகின்றேன்
இரவில் கனவுக்குள் உலவுகின்றேன்
இடையில் கற்பனைகள் புகுந்தாலும்
இதயக்கூட்டுக்குள் இன்புருகின்றேன்
எனக்குள் உன்னைக் காண்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாகிப் போகின்றேன்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பச்சோந்தி பாசங்கள்..


இருதயம் தாண்டி
இறுக்கம் இறுக்கியிருக்கும்
இன்னலிலும் தேடிவந்து பங்குபோடும்
எதுவரை சென்றபோதும் கூட வரும்
என்ன ஆனாலும் கைகோத்திருப்பேன் உறுதிதரும்

அணைத்து நின்ற சொந்தங்கள்
அக்குவேராய் ஆணிவேராய்
அகழும் தருணம் –அவ்வேதனையை
தாங்காத நெஞ்சம்
தனிமையில் சிதைந்து வாடும்

வரவுகளின் எடை கொண்டே
வருகைகளின் எடை அதிகரிக்கும்
வரவில் கொஞ்சம் சரியல் கண்டால் –தூர
விலகியிருந்தே விசாரிக்கும்
விரும்பிய விழிகள் கூட
வெருப்பைக் கக்கும்
வேண்டாமிந்த உறவு என்றே
வெருண்டோடிப் போகும்

ஏற்ற இறக்கம் காணாத்துபோல
ஏளனம் பேசும்
ஏனென்று கேட்கக்கூட திராணியற்க்கும்
ஏறுமுகம் ஒன்றேதான்
ஏற்றமென்று சாடை பேசும்

ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே
ஒன்றுகூடி எள்ளி நகையாடும்
ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்
உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்
உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்
உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்

காசேதான் கடவுளென்று அடித்துபேசும்
கடன் கேட்டுவிட்டால்
கண்ணைச் லேசாய் சுணங்கிக் காட்டும்
பாசங்கள்கூட வேசம்போட்டு மோசம் செய்யும்
பச்சோந்திகளாக மாறி மாறி நடித்துக் காட்டும்

எச்சக் கையை உதறினால் தானே
கூடும் காக்காய் கூட்டம்
ஏதுமில்லையென்றால்
எவ்வளவு பெரிய மனிதரானாலும்-வெரும்
கூடாய் அலையும் உணர்வற்ற ஜடம்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது