வீழ்ந்தே கிடந்தால்?
வாழ்க்கையை வாழத்தானே வந்துள்ளோம்
வா
இந்த வாழ்க்கையை வென்றுபார்ப்போம்
வழுக்குப்பாறையின்மேல்
ஏறுவதுபோல்தான் வாழ்க்கை
வழுக்கிவிடுமேயென்று
நீ வலுவிழந்தால்
வாழ்வை தொடங்குவது எப்போது?
துயரங்களை கண்டு துவண்டு விழுந்தால்
நீ சிகரங்களை தொடுவது எப்போது?
கவலையே எனக் கலங்கிகொண்டிருந்தால்
கண்ணீருக்கு ஓய்வுகொடுப்பது எப்போது?
கண்களில் தூசி விழத்தான்செய்யும்
அதற்காக யாரும்
கண்களை கட்டிக்கொண்டு
நடப்பதில்லையே!
புனிதபூமியில் பிறந்தவிட்டபின்னே
புழுதிகளைகண்டு அஞ்சலாமா?
பிறக்கும்போது எவருமே
ஏற்றத்தாழ்வோடு
பிறப்பதில்லை ஒருதுளி நீரில்
வெளிவருகிறோம் -இதில்
விதிவிலக்கில்லை
வேதனைகளா?
அதை ”வெற்றி”லையாக்கி
சுருட்டி மடி துவட்டித் துப்பு
வெற்றியின் காரம் உள்ளிறங்கி
வேதனையின் இலை
வெளியில் விழட்டும்.
மனதில் இருள்சூழ்ந்துவிட்டதேயென
கண்களைமூடிக்கொண்டால்
வெளிச்சம் வருவது எப்படி?
ஒளிக்கு வழிவிட்டு விழிகளை திற-
உன் உள்ளத்திற்குள்
வெளிச்சம் வேகமாக பரவட்டும்.
விழுந்துவிட்டோமே என
வெக்கப்பட்டுகிடந்தால்
எழுவது எப்போது?
எழுந்துவா தோழமையே!
இலக்கைதொட ஏணியில்லையேயென
நினைத்து மனதை தளரவிடாதே -உன்
துணிவைக்கொண்டு
ஒரு தோனியை உருவாக்கி
அதில் உறுதியோடு துடுப்புபோட்டு –உன்
இலக்கைநோக்கிப்புறப்படு
தூரம் தூரம் என்று நினைத்தால்
தொடும் விரல்கூட தூரமாகிப்போகும்
அருகே எனநினைத்துப்பார்!
உலகவிவரம்
உன் விரல்நுனியில் வந்தடையும்.
குட்டைநீராய் கிடந்து-உனை
நீயே சிறைபடுத்திக்கொள்ளாமல்
அருவி நீராய் பாய்ந்துவா
அதிலிருந்து
தெளிந்த நீரோடையாய் ஓடு
சிலர் கல்லெறிந்து கலக்கலாம்-சில
சாக்கடைகள் சேரலாம் அதையெல்லாம்
சரிசெய்து
சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு
ஆங்காங்கே இளைப்பாறிக்கொள்
அப்போதுதான்
சலைக்காமல் செல்வாய்
வாழ்க்கைமுழுவதும் வெல்வாய்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேரி இன்பம் பெறுவாய்.
தந்தையின் தவிப்பு

தந்தையின் தவிப்பு
எனது அன்பு மகனே
அன்னையைமட்டும்
அணைத்துகொள்கிறாய்
இந்த தந்தையை ஏன்
தள்ளிவைத்தே பார்க்கிறாய்
ஈன்றெடுத்தவள்
அன்னையென்றாலும்
அதில் இந்தத்
தந்தைக்கும் பங்குண்டல்லவா
சிலஇடங்களிலும் சினிமாக்களிலும்
தந்தைகளை தரக்குறைவாகவே
சித்தரிப்பதால் உன் சிந்தையிலும்
தவறாகவே
சித்தரிக்கபடுகிறது!
சில சமயங்களில்
என் பாசத்தை உன்மீது
வெளிப்படுத்த தவறிவிடுவதால்
உன்மீது எனக்கு
பாசமில்லை என்றாகுமா
அன்னையும் தந்தையும் காட்டும்
அளவுக்கு மீறிய பாசத்தால்
குழந்தை
அல்லல்படகூடாதே என
என்பாசத்தை
பூட்டியே வைத்துள்ளேன்
அதை புரியாத நீ
என்னை ஒரு
பூச்சாண்டியைப்போலவே
பார்ப்பதைதான்
என்னால்
பொறுக்கமுடிவதில்லை
விரோதியல்லடா உன் தந்தை
உன்னை
இவ்வுலகத்திற்கு வெளிச்சமாய் காட்ட
என்னை நான்
மெழுகாக்கிக்கொண்டேன்
உருகுவதற்காக
வருந்தாது மெழுகு
தன்
உயிரைக்கொன்று
ஒளியை மிளிரவைக்கும்
அதுபோல்தான் நான்
மகனே
நீ உயிர்வாழ
உன் அன்னை -தன்
உதிரத்தைப்
பாலாக்கித்தந்தாள்
நான்
உனக்காக என் உயிரையே
உழைப்பாக்கி தந்தேன்
உணர்வாயா?
என் உணர்வுகளைப்
புரிவாயா-இந்த
தந்தையின் தவிப்பை
தவப்புதல்வனே
நீ,,,,,,,,,,,,,அறிவாயா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
பட்டங்கள் பல

முதிர் கன்னியாய்
முப்பது வருடங்கள்
காத்திருந்தாலும்
ஏனென்று கேட்க்காத
ஊர் உலகம்
காதலித்தவனையே
கைபிடித்துகொண்டு போனால்
அவளுக்கு கொடுக்கும் பட்டம்
”ஓடுகாலி”
ஊரறிய கைபிடித்து
காலமெல்லாம் கூடவே
கடைசிவரை வருவேனென்று
கட்டியவன்
திடீரென்று கலட்டிவிட்டு
காணாமல் போய்விட்டால்
வாய்கூசாமல் இவளுக்கு
கொடுக்கும் பட்டம்
”வாழாவெட்டி”
கட்டிய நாள்முதல்
கட்டில் ஆடியும்
தொட்டில் ஆடாவிட்டால்
அட்ச்சதை தூவி
ஆசிர்வதித்த அதே வாயால்
அஞ்சாமல் கொடுக்கும் பட்டம்
”மலடி”
விதி செய்த சதியால்
கட்டியவன் காலமாகிப் போக
கலங்கி நிற்கும் அவளுக்கு
கலப்படமே இல்லாமல்
கொடுக்கும் பட்டம்
”விதவை”
அடி பெண்ணே!
படித்து பட்டங்கள் பல
பெறா விட்டாலென்ன
பெண்களுக்காகவே
பல பட்டங்களை
வாரி வழங்க காத்திருக்கிறது
வள்ளலான இவ்வுலகம்
வாழுந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால்
தன்மானமுள்ளவளென்று
உன்னை
இந்த தரணியே பேசும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
