நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீழ்ந்தே கிடந்தால்?


வாழ்க்கையை வாழத்தானே வந்துள்ளோம்
வா
இந்த வாழ்க்கையை வென்றுபார்ப்போம்

வழுக்குப்பாறையின்மேல்
ஏறுவதுபோல்தான் வாழ்க்கை
வழுக்கிவிடுமேயென்று
நீ வலுவிழந்தால்
வாழ்வை தொடங்குவது எப்போது?

துயரங்களை கண்டு துவண்டு விழுந்தால்
நீ சிகரங்களை தொடுவது எப்போது?
கவலையே எனக் கலங்கிகொண்டிருந்தால்
கண்ணீருக்கு ஓய்வுகொடுப்பது எப்போது?


கண்களில் தூசி விழத்தான்செய்யும்
அதற்காக யாரும்
கண்களை கட்டிக்கொண்டு
நடப்பதில்லையே!
புனிதபூமியில் பிறந்தவிட்டபின்னே
புழுதிகளைகண்டு அஞ்சலாமா?

பிறக்கும்போது எவருமே
ஏற்றத்தாழ்வோடு
பிறப்பதில்லை ஒருதுளி நீரில்
வெளிவருகிறோம் -இதில்
விதிவிலக்கில்லை

வேதனைகளா?
அதை ”வெற்றி”லையாக்கி
சுருட்டி மடி துவட்டித் துப்பு
வெற்றியின் காரம் உள்ளிறங்கி
வேதனையின் இலை
வெளியில் விழட்டும்.

மனதில் இருள்சூழ்ந்துவிட்டதேயென
கண்களைமூடிக்கொண்டால்
வெளிச்சம் வருவது எப்படி?
ஒளிக்கு வழிவிட்டு விழிகளை திற-
உன் உள்ளத்திற்குள்
வெளிச்சம் வேகமாக பரவட்டும்.

விழுந்துவிட்டோமே என
வெக்கப்பட்டுகிடந்தால்
எழுவது எப்போது?

எழுந்துவா தோழமையே!
இலக்கைதொட ஏணியில்லையேயென
நினைத்து மனதை தளரவிடாதே -உன்
துணிவைக்கொண்டு
ஒரு தோனியை உருவாக்கி
அதில் உறுதியோடு துடுப்புபோட்டு –உன்
இலக்கைநோக்கிப்புறப்படு

தூரம் தூரம் என்று நினைத்தால்
தொடும் விரல்கூட தூரமாகிப்போகும்
அருகே எனநினைத்துப்பார்!
உலகவிவரம்
உன் விரல்நுனியில் வந்தடையும்.

குட்டைநீராய் கிடந்து-உனை
நீயே சிறைபடுத்திக்கொள்ளாமல்
அருவி நீராய் பாய்ந்துவா
அதிலிருந்து
தெளிந்த நீரோடையாய் ஓடு

சிலர் கல்லெறிந்து கலக்கலாம்-சில
சாக்கடைகள் சேரலாம் அதையெல்லாம்
சரிசெய்து
சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு

ஆங்காங்கே இளைப்பாறிக்கொள்
அப்போதுதான்
சலைக்காமல் செல்வாய்
வாழ்க்கைமுழுவதும் வெல்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேரி இன்பம் பெறுவாய்.


14 கருத்துகள்:

  1. வழுக்குப்பாறையின்மேல் ஏறுவதுபோல்தான் வாழ்க்கை
    வழுக்கிவிடுமே!! என்று நீ வலுவிழந்தால்
    வாழ்வை தொடங்குவது எப்போது?//

    சிந்தனையான வரிகள்.. தொடரட்டும்..உங்கள். கவிதை..

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகள் தத்துவங்கள் தரமாக உள்ளன
    ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. //கண்களில் சிலசமயம் தூசி விழத்தான் செய்யும்
    அதற்காக யாரும்
    கண்களை கட்டிக்கொண்டு நடப்பதில்லையே?//

    உண்மை!! கண்களில் தூசி விழும்போது சிறிது சிரமப்பட்டு மீன்டும் தானாகவே விழித்து தொடர்கிறோம் பார்வைகளை, அதே போல் வாழ்வையும் தொடரச் சொல்லியுள்ளீர்கள். ரசித்தேன் வரிகள் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  4. //சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு,

    ஆங்காங்கே இளைப்பாறிக்கொள் //

    -'ஓடு, ஓடு, ஓடிக் கொண்டே இரு' என்று சொல்லாமல் 'இளைப்பாறிக் கொள்' என்பது புதிய சிந்தனை!

    பதிலளிநீக்கு
  5. அருமை...அருமை...கவிதையும் அதற்கான படங்களும் அருமை....தினமும் காலையில் இந்த கவிதையை வாசித்தால் மனச்சோர்வு நீங்கும்....மலிக்கா வாழ்த்துக்கள்........

    பதிலளிநீக்கு
  6. //சிந்தனையான வரிகள்.. தொடரட்டும்..உங்கள். கவிதை..//

    தாங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் அபூபக்கர்

    பதிலளிநீக்கு
  7. //அருமையான வரிகள் தத்துவங்கள் தரமாக உள்ளன
    ரசித்துப் படித்தேன்.//

    முதலில் தாங்களின்வருகைக்கு மிக்க நன்றி,

    ரசித்து படித்தமைக்கு மகிழ்ச்சி,

    தாங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம், நன்றி தியா

    பதிலளிநீக்கு
  8. //விழுந்துவிட்டோமே என வெக்கப்பட்டுகிடந்தால்
    எழுவது எப்போது?

    தூரம் தூரம் என்று நினைத்தால்
    தொடும் விரல்கூட தூரமாகிப்போகும்
    அருகே எனநினைத்துப்பார்! உலகவிவரம்
    உன் விரல்நுனியில் வந்தடையும்.

    குட்டைநீராய் நீ,,,,கிடந்து-உனை
    நீயே சிறைபடுத்திக்கொள்ளாமல்
    அருவி நீராய் பாய்ந்துவா-அதிலிருந்து
    தெளிந்த நீரோடையாய் ஓடு-அதில்
    சிலர் கல்லெறிந்து கலக்கலாம்-சில
    சாக்கடைகள் சேரலாம் அதையெல்லாம் சரிசெய்து
    சுத்தப்படுத்திக்கொண்டே சுறுசுறுப்பாய் ஓடு//


    நம்பிக்கையை வளர்க்கும் நல்ல கவிதை மலிக்கா

    அன்புடன் புகாரி

    பதிலளிநீக்கு
  9. //உண்மை!! கண்களில் தூசி விழும்போது சிறிது சிரமப்பட்டு மீன்டும் தானாகவே விழித்து தொடர்கிறோம் பார்வைகளை, அதே போல் வாழ்வையும் தொடரச் சொல்லியுள்ளீர்கள். ரசித்தேன் வரிகள் அனைத்தையும்//

    ரசித்து வாசித்துபார்த்தமைக்கு மகிழ்ச்சி
    கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஷஃபி

    பதிலளிநீக்கு
  10. /அருமை...அருமை...கவிதையும் அதற்கான படங்களும் அருமை....தினமும் காலையில் இந்த கவிதையை வாசித்தால் மனச்சோர்வு நீங்கும்....மலிக்கா வாழ்த்துக்கள்......../

    சகோதரர் இஸ்மத் அவர்களே;
    தாங்களின் கருத்துக்கள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. /நம்பிக்கையை வளர்க்கும் நல்ல கவிதை மலிக்கா/


    தாங்களுடைய கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆசான்

    பதிலளிநீக்கு
  12. மிக மிக அருமை தன்னம்பிக்கையை தூண்டும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  13. தன்னம்பிக்கை தரும் வரிகள். துளிர்விடுகிறது மனதுக்குள் தைரியம்..வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது